Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூலர் வரலாறு | திருமந்திரம் திருமந்திரம் | இரண்டாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல் திருமந்திரம் | இரண்டாம் தந்திரம் | ...
முதல் பக்கம் » பத்தாம் திருமறை
திருமந்திரம் | முதல் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2011
03:09

(காரண ஆகமம்)

1. உபதேசம்

(குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் விழிப்படையும் என்க)

113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே

பொருள் : இறைவர் பரம ஆகாயத்தினின்று இறங்கித் தாம் ஆட்கொள்ளத் திருவுளம் பற்றியிருக்கும் ஆன்மாக்களது மலபரிபாகத்திற்கு ஏற்றவாறு திருமேனி தரித்துத் தமது குளிர்ந்த பாதத்தை மலப் பிணிப்பு மீண்டும் அணுகாது பாதுகாக்கைக்குத் தலைக்காவலாய் வைத்து உயிர்க்கு உயிராய் நின்று மனத்தைக் கசியச் செய்து உவமையற்ற திருவருட் பார்வையால் முத்தி நெறிகளைக் குறிப்பாற்காட்டிப் பாசத்தை நீக்கினார்.

114. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

பொருள் : நெற்றிக் கண்ணாகிய எமது சிவபெருமான் மலப்பிணிப்பால் மூடப்பட்டிருந்த ஆன்மாக்களின் அருட் கண்ணைத் திறக்கச் செய்து, பாசத்தை அறுத்து அஞ்ஞான இருள் அணுகாத தனது அருள் ஒளியைக் காட்டிப் பளிங்கின் இயல்பதாகிய ஆன்மாவில் சிவமாகிய பவளத்தைப் பதித்தான்.

115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

பொருள் : இறைவனும், பாசத்தாற் கட்டுண்ட ஆன்மாவும், பாசமும் என நூல்கள் கூறும் முப்பொருள்களில் இறைவனைப் போலவே ஆன்மாவும் பாசமும் அனாதியாம். இம்முப்பொருள்களும் அனாதியாயினும் பசுவும் பாசமும் முதல்வனைச் சென்று அணையவாம். ஆனால் திருவருள் அணுகில் பசுத் தன்மையும் பாசமும் நிற்க மாட்டா. (நீங்கிவிடும் என்பதாம்.)

116. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயில்இருந்த குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

பொருள் : மூங்கிலின் கண் நிறைந்த நெருப்பைப் போல் எமது தேகமாகிய கோவிலிலும் வீற்றிருக்கும் சிவபெருமான், தாயைவிட அதிக அன்போடு, எம்மைப் பந்தித்திருக்கும் மும்மலங்களையும் போக்கும் கிருபா மேகம் போன்ற ஞான ஆதித்தியனாம். (நந்தியெம் பெருமான் பக்குவம் பெற்ற நிலையில் தானே தோன்றிச் சீவரது மல இருளைப் போக்குவான் என்ற கருத்தும் கொள்க)

117. சூரிய காந்தமும் சூழ்பஞ்சம் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சாநிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

பொருள் : சூரியகாந்தக் கல்லானது தானே அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடமாட்டாது. அதுபோல் ஆன்மா ஆனவன் தானே தன்னைப் பந்தித்திருக்கும் மலங்களைச் சுடமாட்டான். ஞாயிற்றின் சந்நிதி மாத்திரையானே சூரிய காந்தக் கல்லின்கண் உள்ள நெருப்பு விளங்கி அதைச் சூழ்ந்திருக்கும் பஞ்சைச் சுடுவதுபோல் ஆசாரிய மூர்த்தியாய் எழுந்தருளிவரும் சிவபெருமான் சந்நிதி மாத்திரையான் ஆன்மாவின் கண் ஞான நெருப்பு விளங்கி அவனைப் பந்தித்திருக்கும் மலத்தை நாசம் செய்யும் !

118. மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தால்நல் சதாசிவ மான
புலம்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலன்களைந் தான்உள் நயம்தான் அறிந்தே

பொருள் : ஐந்தாவது அண்டத்தில் வீற்றிருந்து சதாசிவன் என்னும் திரு நாமத்தையுடையவனாய் ஐந்தாவது அண்டத்தில் இருப்பவனாயினும் தேகமாகிய அம்பலத்திலும் நடனம் செய்பவனாகிய இறைவன் பஞ்ச கலா சோதனையால் ஆன்மாக்களின் அதிதீவிர பக்குவத்தை யறிந்தே பிறவித் துன்பத்துக்கு ஏதுவாகிய மலங்கள் ஐந்து பிரகாரமாயிருக்குமென்று விளக்கி அவைகளை நாசம் செய்து முத்தி யடையச் சாதனமாக ஒரு லட்சியத்தைக் காட்டுவான். (நந்தி - இறைவன்)

119. அறிவுஐம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

பொருள் : வழியறியாது கடற்சூழலில் அகப்பட்டு மயங்கும் ஒருவனைப் போல் ஆன்மா  ஐம்புலனிற் சுழன்று மழக்கமெய்தி நிற்கும். அவனுக்குச் சிற்றறிவாகிய ஆன்மபோதம் பேரறிவாகிய இறை விறைவில் அழிந்தது போல் ஆகும்படி முத்தி அடைதற்குச் சாதனமாகப் பரம குருவாகிய சதாசிவன் ஒரு லட்சியத்தைக் காட்டுவான்.

120. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பலகர் ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

பொருள் : பசுவின் பாலினிடமிருந்து நீரைப் பிரிக்கின்ற அன்னப்பறவை போல, சிதா காயப் பெருவெளியில் ஆடுகின்ற அம்பலவனது ஒப்பற்ற ஆட்டமே சீவர்களிடமிருந்து வினையைப் பிரித்து விடும். அதனால் தீமை காரணமாகக் கருவி கரணங்களில் பொருந்திய பாவ புண்ணியங்கள் எல்லாம் ஏழு பிறவியிலும் வறுத்த வித்து முளைக்காதது போலப் பயன் தாராவாம்.

121. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட டிருப்பர் சிவயோகி யார்களே.

பொருள் : பிறவித் துன்பத்துக்கு வித்தாகிய புலன் கரணங்களின் சக்தியைக் கெடுத்து வியாக்கிரபுரமாகிய புருவ மத்தியில் சுத்த அவத்தையில் துரிய நிலை எய்திச் சகல பற்றுக்களும் அற்றுப் புலன்களும் உயிரும் உடம்போது பொருந்தி நிற்பினும் அவைகளால் உபதேசிக்கப் பெறாது சிவயோகிகள் செத்தவர்களைப் போல் இருப்பார்கள்.

122. சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துன்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதிபோக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் : சிவயோகம் என்பது சித்துப் பொருள்கள் இவை சடப் பொருள்கள் இவை என்று விவேகத்தினால் அறிந்து சிரசால் சென்று அடையும் சிவராஜ யோகத்தை அறிந்து அங்குக் காணும் சிவவொளியுள் புகுந்து நின்று, வேறு வகையான தீமைதரும் யோகத்தை மேற்கொள்ளலாம் அவனுடைய பதியாகிய பரமாகாய மண்டலத்தில் நின்று உய்யும்படியாக தோழமை நெறியை நந்தியெம் பெருமான் நமக்கு அளித்தருளினன்.

123. அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

பொருள் : தான் எவ்விடத்தும் நீக்கமின்றி நிற்கும் உண்மையையும் வானோரும் அறியாத சிவலோகத்தையும் கனக சபையின் கண் நடிக்கும் சீபாதத்தையும், பேரின்பத்தை அளிக்கும் சிதாகத்தையும் சிவபெருமான் கடாட்சித்தார்.

124. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொருள் : மனவெளியில் பரவெளியும் ஆன்மாக்களின் அன்பில் சிவபிரான் அன்பும் ஆன்ம பிரகாசத்தில் அருட்பிரகாசமும் போய்க் கலந்த விதத்தை அறிந்தவர்களே சிவசித்தர்களாம்.

125. சித்தர சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முன்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொருள் : சிவசித்தர்கள் சிவலோகத்தை இப்பூமியின் கண்ணே தெரிசித்தவர், நாத நாதாந்தங்களையும் தம்முள் உணர்ந்தவர்கள். பிறப்பு இறப்பு, மலர், நோய் அற்றவர்கள், மேம்பாடு உடைய பரமுத்தி அடைந்தவர்கள். அவர்கள் முத்தியடைந்த நிலை முப்பத்தாறு தத்துவங்களையும் சோபானமாகக் கொண்டு கடந்து சென்று அவைகளுக்கு அப்பாற்பட்ட சிவத்தை அடைந்ததாகும் சோபானம் - படிக்கட்டு.

126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏறியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களையும் முத்திக்கு ஏற சோபானமாய் உள்ள படிகளாக கொண்டு அவைகளின் வழி சென்று அவைகளுக்கு அப்பாலுள்ள உவமையற்ற பேரானந்தமாகிய சோதியிற் கலந்து வாக்குக்கு எட்டாத சிவபெருமானைத் தரிசித்து, தம் இயல்பையும் உணர்ந்து சிவவியாபகத்துள் அடங்கிச் சிவமேயாய்ச் செயலற்று இருப்பார்கள் சிவ சித்தர்கள்.

127. இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

பொருள் : சிவசித்தர்கள் சிவமாந்தன்மை எய்தி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பர். எல்லாம் சிவன் செயல் என்று யாவற்றையும் தரிசித்துக் கொண்டு இருப்பர். மூன்று காலங்களின் தன்மைகளை உணர்ந்து இருப்பர். அவர்கள் தங்களுக்கு என் ஒருசெயலின்றி இருப்பர்.

128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடித்திடஞ்
சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே

பொருள் : மேலை மந்திரத்தில் ஓதப்பெற்ற சோம்பல் நிலை எய்திய சிவயோகிகள் இருப்பது பரநாத வெளியில்; அவர்கள் நிலைபெற்றிருப்பது ஒளியாய் இருக்கின்ற கனகசபையின் கண்ணே; அவர்கள் அறிவு இருப்பது சுருதிகட்கு அப்பாற்பட்ட இடத்தில்; அவர்கள் சுருதிகளை ஓதி உணர்ந்தது ஆனந்த நித்திரை எய்து வதையே சித்தர்கள் நாதாந்த நிலையில் பேரின்பம் எய்தியிருப்பர்.

129. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொருள் : தங்கள் உள்ளத்தே சிவலோகத்தையும், சிவத்தோடு அத்து விதமாய் பொருந்தி நிற்பதாகிய யோக நிலையையும் இவ்வாறு பொருந்தி நிற்றலால் அனுபவிக்கும் சிவபோகமாகிய பேரின்பத்தையும் தூங்காமல் தூங்குவதாகிய ஆனந்த நித்திரையில் கண்டார்கள். இவர்கள் எய்திய நிலையானது மனவாக்குக்கு எட்டாதது. ஆதலான் எவ்வாறு சொல்வது ?

130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செல்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே

பொருள் : தன் அறிவுக்கு எட்டியபடி இறைவனை எந்தெந்த விதமாக எண்ணி ஒருவன் வணங்குகிறானோ, அந்தந்த விதமாய் நின்று பயனை அளிப்பவன் ஆதிபகவனே. அவன் தான் உவமையற்ற கனக சபையின் கண்ணே உமாதேவிகாண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மாணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

பொருள் : மாணிக்க மணியுள் மரகதச் சோதியாயும் மரகத மாடமாயும் விளங்கும் உயர்ந்த கனக சபையின் கண்ணே உமாதேவி காண நடனம் செய்யும் சிதாகாயத்தில் செழிப்பாய் பிரகாசிக்கும் மாணிக்க மணியாம். சிவபெருமான் ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப அருள் புரிவான்.

132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே

பொருள் : இவ்வுலகத்தில் தங்களை விட்டு நீங்காத ஞான நெறியையும் இவ்வுலகத்திலும் இன்னும் பிறவாமையாகிய மேலான பயனையும், ஒப்பற்ற கனக சபையினின்றும் நீங்காத முத்திப் பேற்றையும், உலகத்தாரோடு பேசாத பெருமையும் ஆகிய இவைகளை, முதல்வனைக் கனக சபையின்கண் வழிபட்டவர்கள் பெற்றார்கள்.

133. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டிருந் தார்புரை அற்றே.

பொருள் : எம் சிவபெருமானைப் போன்று அண்டத்திலும் அணுவிலும் நிறைந்து, அவற்றின் அருமையும் பெருமையையும் ஒரு சேர உணர்ந்து அறிபவர் யார் ? அந்தச் சாதகர் மன ஒருமைப்பாட்டுடன் ஆமையைப் போல ஐம்பொற்களையும் புறத்தே செல்லாது உள்ளுக்கு இழுத்துக் கொண்டு பெருமை சிறுமையாகிய இரண்டையும் குற்றமின்றிச் சாதகர்கள் உணர்ந்திருந்தார்கள்.

134. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலத்தசத் தாமே.

பொருள் : குற்றமற்ற பாலில் நெய் கலந்தாற் போல் சலனமற்ற சிந்தையுள் அத்துவிதமாய் நிற்கும் சற்குருவானவர் சொல்வது யாதெனில் பேச்சு அற்று மௌன நிலையில் நிற்கும் தெளிவடைந்த உயிரானது வாழுதற்கு இடமாகிய உடம்பு நாசமானால் எல்லையில்லாத அருட் சோதியில் கலந்த சத்தாகும்.

135. சத்தமுதல் ஐந்தும் தன்வழித் தான்சாரில்
சித்திக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித்து ஆண்டுகொள் அப்பிலே.

பொருள் : சத்தமாதி விஷயங்கள் ஆன்மாவை உபாதிக்காமல் தங்கள் இனமாகிய அசத்தைச் சேர்ந்த வழி உணர்த்த உணரும் சித்தாகிய ஆன்மாவுக்கு உணர்த்தும் சித்தாகிய இறைவன் திருவடியைவிடச் சேரும் இடம் வேறு உண்டோ ? இல்லை. இதுபோல் சிதாகாயத்தில் சுயம் சோதியாகிய திருவருளில் ஆன்மப் பிரகாசம் சேரும். இவ்வுண்மை கடல் நீரில் கண்டு கொள்க.

136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிஅத ஒன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொருள் : கடல்நீரில் நுட்பமாயுள்ள உவர்ப்பானது சூரியனது வெப்பத்தால் உப்பு என்னும் பேரைப் பெற்று உருவத்தை எய்தியதானது மீளத் தண்ணீரில் சேர்ந்த வழி அதனோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்றல் போல் ஆன்மா ஆனவன் சிவபிரான் விவாபகத்துடன் அடங்கி அத்துவிதமாய் நிற்பான்.

137. அடங்குபேர் அண்டத்து அணு அண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

பொருள் : பெரிய உலகில் நிறைந்துள்ள சட அணுக்கள் ஆகாயத்தில் சென்று அங்கு வேறிடத்தைப் பற்றி நின்றதில்லை. இதுவல்லாமல் வேறு உண்மை யுளதோ ? இல்லை. இது போல் ஒவ்வொரு உடலின் கண்ணும் உள்ள ஆன்மாவும் முத்திக்கரை எய்தின் சிவபிரான் திருவடியையே பற்றி உறுதியாய் நிற்கும்.

138. திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

பொருள் : நூல்களை ஆராய்ந்து அறியின் சிவத்தன்மை எய்துதல் என்பதும், ஆராய்ந்தறிந்த விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கில் சிவலோகம் என்பதும், சிந்தித்து உணர்ந்ததைச் சொல்லில் ஆன்மாக்கள் முடிவிற் சென்றடையும் குறிக்கோள் ஆவதும், புகலிடமாவதும், முப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்ந்தவர்களுக்குச் சிவபிரான் திருவடியே என்பதாம்.

139. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருமேனி செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

பொருள் : குருவின் திருமேனியைத் தரிசித்தலும், அவர் திருநாமத்தை விதிப்படி உச்சரித்தலும், அவர் அருளும் உபதேசமொழியைக் கேட்டலும், அவர் உருமாகிய மந்திரத்தைச் சிந்தித்தலுமே, கலங்கிய சமாதி நிலையைத் தெளியச் செய்வனவாம்.

140. தானே புலன்ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தான் புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தா÷ன் புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தன்னைச் சந்தித்தே

பொருள் : ஆன்மாவானவன் ஐம்புலன்களின் வேறாவான் தன்னைக் கண்டு எமது இறைவனாகிய சிவபெருமானைத் தரிசித்தால் ஐம்புலன்களும் அவன் வசமாகி அவன் செலுத்தும் வழியிற்புக்கு அவன் திருப்பும் வழிகளிலே திரும்பும். அவனை மீறி ஒருசிறிதும் சேட்டியா. (ஆன்மா தத்துவங்களை விட்டுச் சிவத்தைப் பொருந்தின போத புலன்களின் சேட்டை அறும்.)

141. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.

பொருள் : ஐம்புலன்களும் என் வசப்படியன் நான் தரிசிப்பது சிவபிரான் திருவடியாகிய திருவருளையே; சிந்தனை செய்வது அவர் செவ்விய திருமேனியாகிய பஞ்சாட்சரத்தையே; என் வாக்காற் புகழ்வது அவர் திருநாமத்தையே என்புத்தியை விட்டு நீங்காமல் நிற்பது அவர் அருளிய சிவஞான உபதேசம் இவையன்றி வேறொன்றையும் நான் காண்பதில்லை.

142. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினர்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதத் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொருள் : சிவஞானத்தை அருளும் எமது இறைவனாகிய நின்மல சிவபிரானை ஞானகிகள் தங்கள் அறிவின் கண்ணே வைத்து, அவன் திருநடனத்தால் கண்கள் இன்பம் எய்தவம், தேவம் துதிக்கவும் மேலான் சிதாகாயத்தை அடைந்தார். (குரு நாதன் உபதேசப்படி நந்தியை அறிவினில் தியானித்தவர் நாத சம்மியம் கிட்டி ஆகாய மண்டலத்தில் விளங்குபவர்).

2. யாக்கை நிலையாமை

(யாக்கை நிலையாமையாவது உடம்பினது நிலையாமை. திருவள்ளூர் போன்று நிலையாமை கூறிப்பின் அறம் கூறுவார் ஆசிரியர்)

143. மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயனைச் சேர்ந்து
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ஆவபோல்
எண்ணின்ற மந்தர் இறக்கின்ற வாறே.

பொருள் : மாயையாகிய மண் ஒன்று உள்ளது. அதனின்றும் தோன்றி குரு வினையால் விளைந்த உடம்பாகிய பாத்திரம், அப் பாத்திரம் சுடப்பட்ட போது வலிமையாகக் காணப்பட்டிருந்தது. சுடப்படாத பாண்டம் ஆகாயத்திலிருந்து மழைநீர் பெய்த போது கரைந்து மண்ணாவது போல் எண்ணற்ற மக்கள் உடம்பு அழிந்து கெடுகின்றனர்.

144. பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

பொருள் : வினை போகங்களை அளவிட்டு வைக்கப்பட்ட உடம்பு வினை போகங்களை அனுபவித்து நீங்கியபின், சுக போகங்களை உடனிருந்து அனுபவித்த மனைவியும் மக்களும் கூட வரமாட்டார். உயிரோடு வாழ்ந்த காலத்துக் கடைப் பிடித்த விரதத்தின் பயனும் ஞானமும் அன்றி, வேறு எவையும் இறந்தோருடன் கூடச் செல்வது இல்லை.

145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

பொருள் : உடல் விழுந்தபின் எல்லாம் ஒன்றுகூடி ஓலமிட்டு அழுது, அதுவரையிலுள்ள பெயரை மாற்றிப் பிணம் என்ற பெயரைச் சூட்டி, தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் கொண்டு போய்க் கொளுத்திவிட்டு, இவ்வண்ணம் ஒருவர் இருந்தார் என்ற எண்ண மின்றி நீரினில் மூழ்கிவிட்டு நீங்கினார்கள்.

146. காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

பொருள் : உடம்பாகிய வீட்டுக்குக் கால்கள் இரண்டு. உச்சி உத்தரமாகிய முதுகுத்தண்டு ஒன்றுள்ளது. பக்கத்தில் போடப்பட்டுள்ள விலா எலும்பாகிய சாற்றுக் கழிகள் முப்பத்திரண்டு உள்ளன. இவை யெல்லாம் மூடப்பெற்ற தசையாகிய கூரை ஒரு காலத்தில் பிரியும். பிரிந்தால் உயிர் அதனுள் முன்போல் புக அறியாது.

147. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

பொருள் : கபம் மேலோடியது; பல பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளின் தொடர்புகள் ஒழிந்தன. உடம்பு நீங்கியது. பழு எலும்பு வலி கெட்டது. மூக்கினில் கைவைத்துப் பார்த்து உயிரியக்கம் இல்லாமையை உணர்ந்து ஆடையால் மூடிக் கொண்டு போய், காக்கைக்குப் பலியிட்டு இறுதிக் கடனைச் செய்தனர். சீக்கை - சிலேட்டுமம். காக்கைக்குப் பலி - வாய்க்கரிசி போடுதல்.

148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொருள் : நல்ல முறையில் பக்குவமாகச் சமையல் பண்ணி வைத்தனர். அவ்வாறு சமைத்த அறுசுவை உணவை வீட்டுக்குத் தலைவன் உண்டார். மனைவியோடு குலாவியிருந்தார். இடப்புறம் நெஞ்சம் சிறிது வலிக்கிறது என்று மனைவியிடம் கூறினார். சொன்ன பிறகு கீழே படுத்தவர் அப்படியே கிடந்து இறந்து ஒழிந்தார். மந்தணம் கொள்ளுதல் - உடல் உறவு கொள்ளுதல்.

149. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.

பொருள் : சிறப்புடைய தலைமகன் மாடிவீடு கட்டி மகிழ்ந்திருந்தான். அவன் பலர் காணப் பல்லக்கில் அமர்ந்து சென்றான். அவன் பொது இடத்தில் இயல்புடைய மூவர்க்கும் புத்தாடை வழங்கினான். உயிர் பிரிந்த பின் மக்கள் அப்பா என்று அழைக்கவும் அவன் மீண்டிலன்.

150. வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொருள் : நிச்சயதார்த்தம் பண்ணித் திருமணம் செய்து கொண்ட அக் கணவனது காதலும் கசந்து, அவரது நினைப்பையும் உரிமை மனைவியர் பின்னர் மறந்து விடுவர். அவர் இறந்தபின் பாடையில் வைத்து பொருத்தமாகப் புலம்பியழுது, பற்றினையும் சுட்டெரித்துப் பிண்டம் போட்டார்களே, என்ன பரிதாபம்.

151. கைவிட்டு நாடிக் கருத்தழிந்து அச்சற
நெய்பட்டுச் சோறுண்ணும் ஐவரும் போயினர்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

பொருள் : நாடி பார்ப்பவர். இனிப் பயனில்லையெனக் கைவிட்டுவிட, நினைவு கெட்டு உயிர்ப்பு இயக்கம் நீங்க, நெய்யிட்டுப் பிசைந்த சோற்றைச் சுவைக்கும் நாக்கு முதலிய பஞ்சேந்திரியங்கள் செயலிழந்தன; மைபூசிய கண்ணையுடைய மனைவியும் செல்வமும் இவ்வுலகத்து இருக்க, உடலை விட்டு உயிர்போக விடை கொள்ளும் முறை இதுவாகும்.

152. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைந்தன
துன்புறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

பொருள் : உடம்பாகிய பந்தல் பிரிந்தது; உயிர் நிலையாகிய களஞ்சியம் கட்டு விட்டுப் போயிற்று உடம்பிலுள்ள ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைபட்டன. துன்பத்தைத் தருவதாகிய கால முடிவு விரைவாக வந்தடைய அன்புடையவர்களாகிய சுற்றத்தாரும் பிறரும் அழுது நம்மை விட்டு அகன்றார்கள்.

153. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொருள் : நாட்டுக்குத் தலைவனும் நம்முடைய ஊருக்குத் தலைவனுமாக உள்ளவன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாடையில் இறந்த பின் ஏறிக் கொண்டு நாட்டிலுள்ளவர் இறுதிக் கடன் செலுத்தப் பின்னே வரவும், பாடைக்கு முன்னே பறை கொட்டவும், நாட்டின் தலைமகன் காட்டுக்குச் செல்கின்ற முறை இதுவாம்.

154. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே

பொருள் : தொண்ணுற்றாறு தத்துவங்களும் நன்றாகச் செய்யப் பெற்ற மதில் சூழ்ந்த கோயிலில் வாழ்பவராவர். செம்மையாகச் செய்யப்பட்ட மதிள் சூழ்ந்த கோயில் நிலை கெட்ட பின் அக்கோயிலில் வாழ்ந்த அனைவரும் ஓடிப் போயினர். உடம்பு அழியத் தத்துவங்கள் முதலியன நீங்கும்.

155. மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

பொருள் : தேன் பிலிற்றும் மலர்களை அணிந்த கூந்தலையுடைய மனைவியும், செல்வமும், வீடும், இவ்வூரின் கண்ணே தங்கிவிட, உயிர் நீங்கிய உடம்பைப் பாடையில் வைத்து, ஊருக்குப் பொதுவாகப் புறத்தே யுள்ள சுடுகாட்டை நோக்கி எடுத்துச் சென்று மயக்கத்தோடு பாடையினின்றும் எடுத்துச் சிதையில் வைத்து விட்டுச் சென்றார்கள்.

156. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின்று இறைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்னவாறு சுடுகாட்டில் வைத்து எல்லோரும் நீங்கியதைக் கண்டும் மக்கள், உயிர் உடலை விட்டு நீங்காது என்று தாம் தேடும் அருமையான பொருள்களில் மயக்கமுற்று அதனைத் தேடுவதற்கு அலையும் மக்கள் மேன்மை நீங்க நின்று வருந்து கின்றார்களே. அச்சு - உயிர்.

157. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொருள் : ஆரவாரம் செய்து கொண்டு எழுகின்ற உறவினரும் மனைவியும் மக்களும், ஊருக்குப் புறம்பே யுள்ள நீர்த்துறை வரை வந்து நீங்குவர்; அவ்வாறு நீங்கிய பின் வாழ்வுக்கு அடியாகவுள்ள தலையினை மறைத்துப் பின்னர்த் தீயினை மூட்டி நீரில் தலை மூழ்குவார்கள் நீதியில்லாதவர். (சுடுகாட்டில் செய்யும் இறுதிச் செயல் கூறியவாறு.)

158. வளத்திடை முற்றதோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந் தால்அவை ஒடென்று வைப்பார்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொருள் : ஒப்பற்ற உலக முழுவதும் வளப்ப மிக்க இடைப் பிரதேசமாகிய முன்னிடத்து கருப்பை யாகிய குளத்தினது சுரோணிதமாகிய மண்ணைக் கொண்டு பிரமனாகிய குயவன் படைத்தலைச் செய்தான். மண்ணாலாகிய குடம் உடையுமாயின் அதன் பகுதியாகிய ஓடானது உதவும் என்று வைத்திருப்பர். உடல் உடைந்தால் ஒரு கணப்பொழுதும் வீட்டில் வைக்க மாட்டார்கள். (உடம்பின் இழிவு கூறியவாறு.)

159. ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

பொருள் : இவ்வுடம்பில் ஐந்து இந்திரியங்களும் ஆறு ஆதாரங்களும் உள்ளன. எலும்பு இணைப்புகள் முப்பது. அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு. இவற்றின் மீது போர்த்தப் பெற்ற பந்தலும் ஒன்பது வரிசையாகவுள்ள எலும்புகள் பதினைந்து, இவையெல்லாம் சேர்ந்த உடம்பு தீயில் வெந்து கிடந்தது. அதற்குமேல் உயிரின் நிலையை நம்மால் அறிய முடியவில்லை.

160. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

பொருள் : சுரோணிதமாகிய அத்திப் பழத்தையும் சுக்கிலமாகிய அறைக்கீரை வித்தையும் கிளறிக் கருப்பையாகிய உலையில் இட்டு கருவாகிய கூழைச் சமைத்தனர். சுரோணிதமாகிய அத்திப் பழத்தைச் சுக்கிலமாகிய அரைக்கீரைவித்து உண்டு சிசுவாய் வளர்ந்து பின் அமுது சமைத்தவர், இறுதியில் சுடுகாட்டுக்குச் சென்றனரே.

161. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே

பொருள் : உடம்பாகிய வீட்டுக்கு உச்சிக் கூரை இல்லை. கீழே குறடும் இல்லை. ஆனால் இரண்டு கால்கள் உள்ளன. நடுக்கால் ஒன்று உள்ளது. இவ்வாறுள்ள கூரையை ஓலையினால் வேய்ந்தவர் இடையே வரிச்சுக் கழி போட்டுக் கட்டாமல், அழகுபடச் செய்த ஒரு வெண் கோயிலாகும். (நடு நாடியாகிய சுகுமுனையின் பிராணனைச் செலுத்தாமையால் உடம்பு அழிந்து கெடுகிறது.)

162. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொருள் : உயிர் நடனம் செய்த உடம்பாகிய கூடம் அப்படியே கிடந்தது. முன் உயிர் இருந்த காலத்துள்ள அழகு இப்போது அவ்வுடம்பில் இல்லை. அசைந்து ஆடிக் கொண்டிருந்த பிராண ஓட்டமும் நின்றது. அவ்வாறு பிராணன் நீங்குதலும் உற்றார் உறவினர் ஒப்பாரி வைத்து அழுகின்றனர். நெருப்பை உண்டாக்கி அதில் உடலைச் சுட்டெரித்து விடுகிறார்கள்.

163. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.

பொருள் : மீன் முட்டையைப் போல் கருப்பையில் பதியும் உடம்பு பத்து மாதங்களில் வெளி வந்தது. இவ்வுடம்பு ஏதாவது விருப்பப்படி அமைந்தது அல்ல. அறிவிலிகளே ! பிறந்து பன்னிரண்டு ஆண்டுகளில் அது உலக வாசனை பொருந்தும் இடமாக இருந்தது. எழுபது ஆண்டுகளில் மடிந்தது. இந் நிலையாமையை அறிவீராக.

164. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

பொருள் : உடம்பாகிய அகல் இருக்க, உயிராகிய தீபவொளியைக் காலன் கொண்டு சென்றான். அறிவில்லாதவர்கள் உடம்பு அழியும் உண்மையை அறியாது அரற்றுகின்றனர். பிறப்பாகிய விடிவும், இறப்பாகிய இருளும் மாறி மாறி வரும் என்பதை உலகினர் அறியாது. நிலையற்ற உடம்பை நிலையென்று பற்றிக் கிடந்து வருந்துகிறார்களே.

165. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந்து ஏழா நரகிற் கிடப்பர்
சூடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

பொருள் : விரிந்த கொன்றை மாலை அணிந்தவனும், மாயைக்கு ஆதாரமானவனுமாகிய சிவன் படைத்த உடம்பிலும் உயிரிலும் கலந்து விளங்கும் உருவத்தை வணங்காமல், குடர்கிழிய விருப்பம் மிக்க சுற்றத்தார் கதறுமாறு துன்பம் பெருகி ஏழு வகையான நரகத்தில் வாடிக் கிடப்பர். (உடம்பில் விளங்கும் சோதியை வணங்காமல் அறிவில்லாதவர் நரகில் கிடந்து வாடுவர்.)

166. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

பொருள் : வெண்கொற்றக் குடையும் குதிரையும் செங்கோலும் கொண்டு, நாற்புறமும் மக்கள் சூழ்ந்து வர நடுவில் செல்லும் போதே அழிவு உண்டாகும் காலத்தில் அத்தலைவனது பிராணன் இடம் வலமாகச் சுழன்று நின்றுவிடும் முடிமன்னராய் நால்வகைச் சேனை புடைசூழச் சென்றாலும் பிராணன் நீங்குவதைத் தடுக்க முடியாது.

167. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

பொருள் : உடம்பாகிய தோற்பையில் இருந்து வினைமுடிவு பெறச் செய்து, வினைப் பயனை ஊட்டிக் கொண்டிருந்த உயிராகிய கூத்தன் வெளிப்பட்டுப் போனபின் இவ்வுடம்பாகிய கூட்டைக் காக்கை கொத்தினால் என்ன ? கண்டவர்கள் பழித்தால் என்ன ? உடம்பைச் சுட்டெரித்த பின் எலும்பின்மேல் பாலைத் தெளித்தால் என்ன ? பலர் பாராட்டிப் பேசினால் என்ன ?

3. நிலையாமை

(செல்வ நிலையாமையாவது, புறச் செல்வமாகிய மாடுமனை முதலியவற்றின் நிலையாமை)

168. அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே.

பொருள் : அருள்புரியும் அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும் பொருட் குவியலும் ஆகியவற்றைப் பிறர் கவர்ந்து செல்வதற்கு முன், தெளிந்த உயிரோடு நிலையான செல்வத்தையுடைய இறைவனை அடைந்தவுடன், பிறகு அவன் பெரி தவத்தையும் விரும்பாது வெருவுவான். உயிருடன் உள்ள போதே சிவனைச் சேரின் மாதவம் வேண்டா.

169. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனை
பெயற்கொண்டால் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொருள் : வானத்தில் இயங்குகின்ற ஒளியுடைய சந்திரன் ஒளி குறைந்து இருளாவது போலத் தளர்ச்சியுறும் செல்வம் குறைந்து இல்லையாவதை யாரும் சொல்லத் தேவையில்லை. ஆதலால் தேவதேவனாகிய இறைவனைப் பொருள் மயக்கம் நீங்கி நாடுங்கள். மழை மேகம் போலப் பெருஞ்செல்வம் உண்டாகும். இறைவனே நிலையான செல்வம் ஆகும்.

170. தன்னது சாயை தனக்குத் வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள் : தன்னோடு பொருந்திய நிழல் தனக்கு உதவாதது கண்டும் அறிவில்லாதவர்கள் தமக்கு வேறாகவுள்ள செல்வம் தமக்கு உதவும் என்று எண்ணுவார்கள். உடலோடு ஒன்றாக வந்தது உன்னுடைய உயிர். எனினும் உயிர் போகும்போது உடல் அழிந்து போகும். அகக்கண் இடமாக விளங்குகிறது நிலையான ஒளி. அதனை உடம்பு உள்ளபோதே நாடிக் கொள்ளுங்கள்.

171. ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள் : பூவினது மணத்தை ஆராய்ந்து கண்டு அதனுள் பொருந்திய தேனைச் சேகரித்த வண்டு, எடுத்துக் கொண்டு வந்து ஒரு மரக்கிளையில் அடையாக வைக்கும். வண்டினை விரட்டிவிட்டு வலிமையுடையவர் அத்தேனை எடுத்துச் செல்ல, அது காட்டிக் கொடுத்து நீங்கிவிடும். செல்வம், உடையானுக்குப் பயன்படாமையோடு தீமையும் செய்யும்.

172. தேற்றித் தெளிமின் தெளிந்தநீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

பொருள் : செல்வம் நிலையாமையை நன்கு அறிந்து தெளியுங்கள். தெளிந்தவர்கள் மீண்டும் பயம் கொள்ளாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வத்தைக் கண்டு கலங்கி மயங்காமல், உங்களது பொருட் பற்றினை நீத்து மேலான செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். உயிரை உடலினின்றும் கூறு செய்கின்ற கூற்றுவன் வரும்போது கடத்தலும் கூடும்.

173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

பொருள் : மகிழ்ந்து அனுபவிக்கின்ற பரம்பரைச் சொத்தும், தாமே முயன்று ஈட்டிய பொருளும், ஆற்றுப் பெருக்கில் சென்று உடனே கவிழ்கின்ற படகைப் போன்றன. அழிந்து போகின்ற உடம்புக்கு ஒரு நிலை பேறாகச் சேமித்து வைத்துள்ளதை உணர்ந்து பெருக்கிக் கொள்ள உலகவர் அறியார்.

174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவுஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலும் ஆமே.

பொருள் : உயிர்க்கு உதவியில்லாத வாழ்வுக்குரிய பொருளும் மனைவியும் மக்களும் உடன் பிறந்தாரும் எமக்கு அளவற்றவர் இருக்கின்றனர் என்று உலகவர் கூறுவர். ஆனால் இவற்றை விட்டு உற்ற இடத்து உதவும் ஒளிப் பொருளான சிவத்தை நினைந்து அச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வார்க்கு கூவி அழைத்துக் கொள்ளும் மேலான செம்பொருளை அடைதல்கூடும்.

175. வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொருள் : உலகவாழ்வில் ஆசை பெருகிற்று; உண்மைப் பொருளை அறிபவர் யாரும் இல்லை; உடம்பை நிலையாக நிறுத்தும் கழுமுனையாகிய தறி ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு அழிக்கின்ற வழி ஒன்பது உள்ளன. உறவு முறையை நிலைநாட்டிய தாயாரும் சுற்றத்தாரும் வந்து வணங்கிய பின் சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து நீங்கிவிடுவர்.

176. உடம்போடு உயிரிடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் குழகி லாரே.

பொருள் : உடம்பைவிட்டு உயிர் இடையிலே விட்டுச் செல்லும் போது வெல்லும் வகை ஒன்றுமில்லை. இறைவனை எண்ணுங்கள் உயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் பரிசினை நல்கும் உண்மையான எம தூதர்கள் வேதனைப்படுத்தும் பரிசினைக் கருதமாட்டார்கள்.

4. இளமை நில்லாமை

(அஃதாவது வாலிபத் தன்மை மாறும் இயல்பினது)

177. கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

பொருள் : கிழக்கே வானத்தில் உதயமாகிய நன்றாக விளங்கிய சூரியன், மேற்கில் மறைவதைக் கண்டும் அறிவில்லாத மக்கள் இளமை நிலையாமையை உணரார். அதே போன்று இளங்கன்று சில நாளின் வளர்ந்து மூப்படைந்து இறப்பதைக் கண்டும் அகன்ற உலகிலுள்ளோர் இந்த இளமை நிலையாமையை உணரமாட்டார்.

178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே.

பொருள் : பல ஆண்டுகள் அறியாமையில் கழிந்தோடின. உயிர்த்தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

179. தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆயந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

பொருள் : இளமையானது நாள்தோறும் சிறிது சிறிதாகத் தேய்ந்து கடைசியில் இற்று ஒழிந்தது. மூப்பு எய்திய பின் அருமையான காரியங்கள் செய்ய முடியாதனவாகும். ஆதலால் உயிர் செழுமையான உடலில் இருக்கும் போதே கங்கையாறு பாய்ந்து மறைந்த பரவிய சடையையுடைய சிவபெருமானை ஆராய்ந்து பொருந்துங்கள். நந்தி - இறைவன்.

180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும் பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

பொருள் : மென்மையான பெண்கள் கரும்பைப் பிழிந்து கடைசியில் வருகின்ற சாற்றினைப்போல, இளமைக் காலத்தில் என்னை இனிமையாக விரும்புவர். அத்தகையான, தாமரை மொட்டுப் போன்ற முலையினையும், அழகிய அணியையும் உடைய பெண்களுக்கு, இளமையில் கரும்பைப் போன்று இனிமையாகவும் முதுமையில் எட்டிக்காய் போன்று கசப்பாகவும் ஆயினேன்.

181. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

பொருள் : பாலன் என்றும் இளையன் என்றும் முதியோன் என்றும் உள்ள பருவ காலங்கள் மாறுபடுவதை உலகோர் அறியவில்லை. ஆனால் இவ்வுலகத்தைக் கடந்து அதற்கு மேலாக உள்ள அண்டங்களையும் ஊடறுத்து நிற்கின்ற இறைவனது திருவடியை மேன்மேலும் பொருந்தி நான் அன்பு செய்வேன்.

182. காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.

பொருள் : நாள்தோறும் காலையில் எழுந்தவர்கள் மாலையில் உறக்கத்துக்குச் செல்வதும் வாழ்நாள் குறைவதும் போதும் ! அவ்வாறு வாழ்நாளைக் குறைக்கின்ற உருத்திர மூர்த்தி கோபமுடையவன். ஆகிலும் பொருந்த நினைப்பவர்க்கு இன்பம் அருளுகின்றான்.

183. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொருள் : பருமையான ஊசி போன்ற ஐந்து இந்திரியங்களும் ஒருபை போன்ற உடம்பினுள் உள்ளன; பறந்து சென்று தீயனவற்றைப் பற்றி உண்ணும் காக்கை போன்றவை இந்த ஐந்து இந்திரியங்களுமாகும்; ஐந்து இந்திரியங்களும் சிரசின்மேல் பனிப்படலம் போல விளங்கும் ஒளியில் தலைப்பட்டு அமையுமாயின் ஐந்து இந்திரியங்களைக் கொண்ட உடம்பின் நினைவு நீங்கிவிடும்.

184. கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

பொருள் : தண்ணிய சந்திரனும் வெம்மையான சூரியனும் உலகவரின் உடம்பினுள் இருந்து வாழ்நாளை அளந்து கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. ஆகாயப் பேறு அடைபவரையும் விளையுள்பட்டு அழிபவரையும் சூரிய சந்திரர்கள் முப்பது ஆண்டில் பிரிந்து விடுகின்றனர்.

185. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொருள் : பொருந்திய பதினாறு கலைகளும் உடனாய் நிற்றலைக் கண்டும், கீழானவர்கள் தலைவழியே சென்று மேல்-விளங்கும் இறைவனைச் சிந்திக்கின்றிலர். சினக்கின்ற காலனாகவுள்ள உருத்திரன் மீண்டும் கருப்பையில் வைத்தபின் அதில் போய் மீண்டும் பிறவியில் வீழ்வர். இவர் மனமயக்கம் ஒழியாதவராவர்.

186. எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இமையினால் ஏத்துமின்
எய்திய நாளின் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

பொருள் : பிராசாத நெறியே சென்று சந்திர மண்டலம் விளங்கிய காலத்து, இளமை நிலைக்காதிருக்கும் போது, துதிப்பாடல்களால் சிவனைப் புகழ்ந்து பாடுங்கள். அவ்வாறு ஏத்திப் பிராண இயக்கம் நடைபெறுவதை உணராமல் அப்போது தியானத்தில் பொருந்தியிருந்து உண்மையை நான் உணர்ந்தேன். (இளமையிலேயே இறைவனை ஏத்தி வழிபட்டுச் சித்தி பெற வேண்டும்).

5. உயிர் நிலையாமை

(அஃதாவது, உயிர் உடம்பில் நில்லாமை)

187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே.

பொருள் : துளிர்க்கின்ற செம்மையான தளிரையும் குளிர்ச்சியான மலரையும் உடைய பூங்கொம்பிலே, தோற்றுகின்றவையெல்லாம் சருகாக மாறுதலைக் கண்டும், தவறுதலன்றி உயிருள்ள போதே இறைவனது திருவடியை ஏத்த மாட்டார்கள். அவர்கள் எமனிடமிருந்து அழைப்பு வந்த போது இறைவனை ஏத்துவதற்கு அறிய மாட்டாதவர் ஆவர்.

188. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.

பொருள் : பிரமனாகி ஐவர்க்கும் தொழில் செய்வதற்கு உடம்பாகிய ஒரு நிலம் விளைந்து கிடந்தது. ஐவரும் அவ்வுடம்பினை ஓம்பி உயிர்க்கு வினைப் போகத்தை ஊட்டி வருவார்கள். இவர்களுக்குத் தலைவனாகிய சிவனிடமிருந்து வினை நுகர்வு முடிவில் இறுதிச் சீட்டு வருதலும், இவர்கள் அவ்வுடம்பாகிய விளை புலத்தை ஓம்பாது கழிந்தனர். ஐவர் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவர்.

189. மத்தளி ஒன்றுள தாளம்இ ரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொருள் : மண்ணாலாகிய உடம்பு ஒன்று உண்டு அதில் உச்சுவாச நிச்சுவாசமாகிய தாளங்கள் இரண்டு உள்ளன. அதனுள் வாழ்கின்ற சீவனாகிய அரசனும் அங்கு வீற்றிருக்கின்றான். அங்குள்ள சீவன் உடம்பை விட்டு நீங்கினால் கோயிலாகிய உடம்பு மீண்டும் மண்ணாய் விட்டது.

190. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விøளாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொருள் : சிரசின்மேல் ஈசான திக்கில் விளங்குபவனும் வாக்கு உருவாமாக இருந்து கொண்டு நடிப்பவனும் வெந்து போகின்ற உடம்பினுள்ளே விளையாடும் நம் தீயாகவுள்ளவனுமாகிய இறைவன் அழுகின்ற உடம்பாயுள்ளான் என்ற தன்மை அறியாதவர், உடம்பினைத் தாங்குகின்ற அருமையான சீவனையும் அறியாதவராவர்

191. சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்றது அறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொருள் : சிவசூரியன் உடம்பில் கீழும் மேலும் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் சென்று அறிவான். அவன் உணர்வு மயனாக இருந்து உடம்பில் வியாபித்த அறிதலை உலகவர் அறியவில்லை இந் நிலவுலகில் வாழ்கின்ற மக்கள் நான் என்னும் அகங்காரம் கெட்ட ஞானியரிடம் அவன் கலக்கின்ற மாயத் தன்மையும் உணர மாட்டார், என்னே அறியாமை ?

192. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்பும்ஒ ராண்டெனும் நீரே.

பொருள் : சிக்கல் அறுத்து ஒழுங்குபடுத்தி நெய்யப் பெற்ற பட்டாடை கிழிந்து ஒழியும் அவ்அழியும் தன்மையை உலகவர் நன்றாக உணரவில்லை. அதுபோன்று கூறப் பெறுகின்ற கரியமயிர் நரை மயிராவதும் பூமியில் இறப்பதும் பிறப்பதும் சிறு பொழுது தாம் என்று நீவிர் உணருங்கள்.

193. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சொன் றனவே.

பொருள் : சுழுமுனை யாகிய அகப்பை இடம்பெற்ற உடம்பாகிய பானைக்கும் விந்துவாகிய அரிசி ஒன்றேயாம். உடம்பினுள் சோம சூரியாக்கினியாகிய அடுப்புக்குப் பிராணன் முதலிய ஐவகை வாயுக்களும் விறகாகும். அடுத்து வீணாக்காமல் விந்து சக்தியைக் கொடுத்து மதி யமுதத்தைப் பெறுங்கள் வரையறுக்கப் பெற்ற நாட்கள் வீணாகக் கழிக்கின்றனவே.

194. இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றுஒளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

பொருள் : இன்பத்தை நாடுகின்ற வண்டு, கூட்டமான மலர்களின் மேல்சென்று, மணம் நிறைந்த தேனை உண்பது போல, சீவன் அகத் தாமரையில் இன்பத்தை நாடி நினைத்தாலும் சோம சூரியாக்கினியாகிய ஒளியில் விளங்கும் சிவன் புறத்தே செல்லும் மனத்தில் விளங்க மாட்டான்.

195. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொருள் : பிறவியில் இன்பம் ஆகின்ற நெறியை விரும்பி ஒழுக்கத்தில் நில்லுங்கள். இனி மேலாம் நிலம் அல்லாது ஒளி மண்டலத்தை விரும்பி இறைவனை ஏத்துங்கள். மானிடராய்ப் பிறக்கும் நல்லூழைப் பெற்ற அருமையானவருக்கு, சொல்லப் போனால் விதியாக் கூறவேண்டியது என்ன உள்ளது.

196. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போருதொரு
தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்ட போதே.

பொருள் : வஞ்சனை பேசி அறம் அழிய நடவாதீர்கள். கொடியோராகிப் பிறர்பொருளைக் கவராதீர்கள். செம்மையுடையோனாகிச் சிறப்பாக உண்ணும்போது, யாரேனும் நாடிவரின் ஓர்அகப்பை உணவு கொடுத்துப் பின் உண்ணுங்கள்.

6. கொல்லாமை

(ஓர் உயிரை உடம்பினின்றும் பிரிக்காமை)

197. பற்றாய் நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

பொருள் : பற்றுக் கோடாகிய சிறந்த குருவின் பூசைக்கும் பலவகை மலராக உள்ளது கொல்லாமையாகும். கண்மலரின் ஒளியே நல்ல மாலையாகும். அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும். இவை யனைத்துங் கொண்டு பூசிக்கின்ற உயிர் விளங்கும் இடம் சிரசின் உச்சியாகும், சிவகுரு பூசைக்குச் சிறப்பான மலர், கொல்லாமையாகும். அகப் பூசைக்கும்ப புறப்பொருள் தேவையில்லை.

198. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொருள் : கொல் என்றும் குத்து என்றும் சொல்லிய விலங்கை யொத்த மக்களைக் காலனது ஏவலர் வலிமையான கயிற்றால் கட்டி, செல் என்று நில் என்றும் அதட்டி, அனல் கக்குகின்ற நரகத்தில் நெடுங்காலம் நிற்க என்று ஆணையிடுவர்.

7. புலால் மறுத்தல் (புலால் உண்ணாமை)

199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தலை தூதுவர்
சொல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரோ

பொருள் : பொல்லாத புலால் உணவை உண்ணும் கீழ்மக்களை யாவரும் காணும் வண்ணம் எமதூதர்கள் கறையானைப் போன்று பற்றி அரித்துப் பின் அனல் கக்குகின்ற நரகத்தில் முதுகைக் கீழ்ப் புறமாகக் கிடத்தி வைப்பர்.

200. கொலையே களவுகள், காமம், பொய்கூறல்
மலையான பாதக மாம்அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே

பொருள் : கொலை, களவு, காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்ச மா பாதங்களாகும். அப்பாவங்களை நீக்கி, சிரசின் மேல் திருவடி சூடி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலும் ஆகும்.

8. பிறன்மனை நயவாமை (பிறன் மனைவியை விரும்பாமை)

201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

பொருள் : அன்புடைய மனைவி வீட்டில் இருக்கவும், பிறரால் காக்கப்பட்ட மனைவியை விரும்பும் காமுகர், வீட்டில் காய்த்துப் பழுத்துள்ள பலவின் கனியை உண்ணாமல், காட்டில் பழுத்துள்ள ஈச்சம் பழத்தைப் பொறத் துன்பப்படுவது போலாம். (பிறர் மனைவியை நாடுவது அறியாமையாகும்.)

202. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம்இல் லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்துஅறி யாதவர் காலற்ற வாறே.

பொருள் : செப்பமாக வளர்த்த மரத்தினின்றும் பெற்ற இனிய மாம்பழத்தைச் சேமிப்புப் பொருளாக எண்ணி அறையில் வைத்துவிட்டு, தகுதியில்லாத புளியம் பழத்துக்காகப் புளியங் கிளையில் ஏறி, ஆலோசனை யில்லாதவர் பிராணசத்தி குறைவுற்று வருந்துகின்றாரே !

203. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள் கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொருள் : பொருளில் பற்றுடையோரும், அறிவை மறைத்து ஆளுகின்ற அறியாமையாகி இருளில் தோன்றிய மின்வெளிபோன்ற சிறு அறிவைப் பெரிதென்று மதித்திருப்போரும் மருண்ட பார்வை உடைய பெண்ணிடம் மயக்கம் கொள்வார்கள். அவ்வாறு மயங்கிய மனத்தை மாற்ற முடியாதவராவர்.

9. மகளிர் இழிவு (பொது மகளிர் இழிவு)

204. இலைநல லாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் வீரே.

பொருள் : இலை முதலியவற்றால் அழகாயுள்ள எட்டிமரம் குலையாகப் பழுத்திருந்தாலும் அக்குலையில் கவர்ச்சியுடைய தாகிய பழத்தைப் பறித்து உண்ணலாகாது. அது போல முலை நலத்தினால் கவர்ச்சியைக் காட்டிப் புன்முறுவல் செய்வார் மேல் அவரது கவர்ச்சியில் ஈடுபடாமல் விலகிவிட வேண்டும். அவ்வாறு அவர்பால் செல்லும் மனத்தினையும் கடிய வேண்டும்.

205. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

பொருள் : பிறர்மனை செல்வோர் அம்மனைக்குரிய மாதரை நாடினால், மலைச் சுனையில் புகுகின்ற நீர் மூழ்குவாரைச் சுழிக்குள் சிக்க வைத்தல் போல, காமச் சுழலில் சிக்க வைத்துவிடும். கனவுபோல அம்மாதர் மாட்டுச் சிறிது சுரக்கின்ற அன்பை நனவு போல உண்மையானது என்று விரும்புதல் கூடாது.

206. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறுப் பேசி அகன்றொழிந் தாரே.

பொருள் : அழகு பொருந்திய வாழ்க்கையுடைய இளம் பெண் யானையை ஒத்த பெண்கள் மழையைக் கண்ட புல் போலத் தளிர்த்திருந்த போதிலும் தேவரை யொப்பார் வந்து பொருந்த, முன்னமே புணர்ந்தவரை வெளியே இரும் என்று சொல்வார் மேலும் குறிப்பு மொழியால் வெளியேறச் சொல்லி நீங்கிப் போவர்.

207. வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.

பொருள் : உலகில் மங்கையொடு கூடுவதால் என்ன பயன் விளைந்து விடும் ? மெய்ப்பொருளை அகத்தே உணர்ந்த ஞானியரும் விதியாகக் கூறுவது அதுவேயாகும். அம்மங்கையர் கூட்டம் புறத்தே ஆலைக் கரும்பின் சாறு போல உள்ளது. கொள்கலமாகவுள்ள அகத்தே பெரிய வேம்பு போன்றதாம்.

208. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைத்தவர் போகின்ற வாறே.

பொருள் : சுக்கிலத்தை மாதரின் பாசி படிந்த கருக்குழியில் ஆழநடுவராய் இன்புறுவார்களைத் தடைபடுமாறு பிணித்துத் தடுக்காவிட்டால் மறைமுகமாகச் செல்லும் சிறுவாயிலில் நுழைந்தாவது போய் அழிந்து விடுவர்.

(இவ்வைந்து மந்திரங்களும் பரத்தையர் பற்றியன என்று கொள்ளுதல் பொருத்தமாகும்)

10. நல்குரவு (வறுமை)

209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்டம் இல்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே

பொருள் : உடுத்திய ஆடை கிழிந்து பயனற்றது போல வறுமை யுடையோர் வாழ்க்கையும் பயனற்றுப் போய் விட்டது. அடையப் பட்ட சுற்றத்தார்களும் அன்பின்றி விலகிவிட்டார். கொடுக்கல் வாங்கல் ஒன்றும் இல்லை. உற்சாகம் இல்லை. நாட்டில் இருப்பவராயினும் நாட்டோடு ஒட்டிய கம்பீர நடையில்லை.

210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொருள் : பொழுது விடிகின்றதே என்று வயிற்றை நிரப்புவான் வேண்டி, அவ் வாழ்க்குத் தேவைப்படும் அருமையான பொருள்களைத் தேடுவோர்களே ! எக்குழியை நிரப்பினாலும் இறைவனது பொருள்சேர் புகழைப் பாடுங்கள். பிறவிக்குக் காரணமாகிய வினை நீங்கினால் வயிற்றுக்குழி நிரம்பிவிடும்.

211. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொருள் : உலகவர் வயிற்றுக் குழியை நிரப்புவதற்குப் பொன்னைத் தேடுவார்கள். அவ்வயிற்றுக் குழியைக் குறையாது நிரப்புவது யவர்க்கும் கடினமானது. அக்குழியைத்  தூர்க்கும் திருவடி ஞானம் பெற்றிபின் பிறவிக்குக் காரணமான வினையும் நீங்கி அவ்வயிற்றுப் பிணியும் நீங்கும்.

212. தொடர்ந்தெழு சுற்றம் வினையினும் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொர காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.

பொருள் : பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற சுற்றங்கள் வினையைக் காட்டிலும் தீமை செய்வன. வாழ்நாளைக் கடந்து உயிர் உடலைவிட்டு நீங்குவதற்கு முன்னே உலகப் பொருளை விட்டு மாறுபட்டு உண்மைப் பொருளை நாடி நீங்காதிருந்து பிறவிக் குழியைத் தூர்ப்பதோடு பசிப் பிணியையும் போக்கலாம்.

213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

பொருள் : ஆறு அத்துவாவின் வழியாக உயிர்க் கூட்டம் வினைகளை ஈட்டின. மெய் முதலிய ஐம்பொறிகளும் சுவை முதலிய பொருளின் மேல் சென்று உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைக் கொடுத்தன. பல கொடிய வினைகள் வாழ்க்கையை வேதனைப் படுத்தின. வாழ்க்கையை வெறுத்த வறுமையாளன் வறுமை நீங்க ஈசனை வேண்டியிருந்தான்.

ஆறு அத்துவா - வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம், ஆகிய ஆறு வழிகள்.

11. அக்கினி காரியம் (தீ ஓம்புதல்)

214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

பொருள் : குற்றமில்லாத மேன்மையான வானத்தில் வாழ்பவரும் நிலத்தில் வாழ்பவரும், திசைகளில் வாழ்பவர்களும் திசைகளுக்குரிய திக்குப் பாலகர்களும், வேதத்தை முதலாகக் கொண்டு அந்தணர் வேள்வி செய்யின் நலமுறுவார்கள்.

215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாம்அறி வாலே தலைப்பட்ட வாறே.

பொருள் : வேள்வியினைச் செய்யும் வேதம் ஓதும் அந்தணர் சுவர்க்கத்தை விரும்பி அக்கினி காரியம் செய்து, தானம் கொடுத்து, உணவை உட்கொள்வார், தங்களுடைய விதியைத் தாங்களே நிச்சயம் செய்யும் மெய்ந் நெறியை உணர்ந்தவர் தங்களுடைய அறிவைச் சிரசின் மேல் செலுத்திவாழ்வர்.

216. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொருள் : இல்லறத்திலுள்ள அந்தணர் புறத்தே ஓம்பும் அக்கினியின் தத்துவத்தை அகத்தே உணர்ந்து மனைவியோடு கூடிச் செய்து, அதன் உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக எண்ணி யாமத்தில் இக்கிரியை செய்வதே பொருந்துகின்ற துணையான மேன்மையான ஒரு நெறியாகும். (அங்கியுள் அங்கி - காருக பத்தியம்; ஆண் பெண் கூட்டுறவு).

217. போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொருள் : ஆண், பெண் சேர்க்கையை விரும்பி அருளை எண்ணிப் புரிந்தால், குண்டலினி விளங்கி மேலேறியும் சிற்சத்தி இருள் நீங்கி ஒளிபாயும் விளங்கும். இந்நிலை எய்தாது சுக்கில கரோணிதக் கலப்பால் விளைந்த ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் மாற்றம் அடைந்து இரண்டும் மயக்கத்தை அடைகின்றன.

218. நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகையறி வார்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம்என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.

பொருள் : ஆண்பெண் கூட்டுறவினால் உண்டாகும் உணர்வோடு மேலே சென்று, புருவ மத்தியில் விளங்கும் சுடரின் தன்மையை அறிவார்க்கு, மலம் நீங்குதலாகிய அந்நாள் நன்னாளாம். எப்போதும் உடலில் நிலைபெற்ற செல்வமாகிய சிவன் அந்த அக்கினியேயாம்.

219. பாழி அகலும் எரியும் திரிபோல்இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடும் ஆமே.

பொருள் : யோனி குண்டத்துள் உள்ள அக்கினியைத் தீப்பந்தம் போல் மேலெழும்படி செய்தால், அடைகின்ற வினைகளும் நோய்களும் முடிவு எய்தி நீங்கும். கீழேயுள்ள அக்கினி மேலே நிலைபெற்றால் வினை முதலியவை கெடும். அவற்றைத் தாங்கியுள்ள வினைகளைச் சுட்டு மேலும் அவை ஏற்படாமல் காக்கும்.

220. பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

பொருள் : பொன்னும் மணியும் கேட்டினைத் தரும் முன்னே அருளிச் செய்த அருமையான ஞானச் செல்வத்தை அளித்த தலைவனாகிய சிவனை நாடுங்கள். மேலான சிவாக்கினி சிரசின் மேல் உதிப்பதை நினைந்து, ஞானச் செல்வத்தை நாடி அக்கினி காரியம் செய்கின்றார்கள்.

221. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன்உலகு ஏழும் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.

பொருள் : ஒளிவடிவானவனும் அழிவில்லாத தலைவனும், ஒளிமிக்க சுடராகி என் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கின்ற கண் ஒளியானவனும், ஏழு உலகங்களையும் கடந்த அக்குளிர்ந்த சுடராகியவனும் ஆகிய சிவன் ஓமத் தலைவனாகிய - இயமானனும் ஆவான். இயமானன் - வேள்வித் தலைவன்.

222. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி வினைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

பொருள் : உடலின் சகல அக்கினி காரியத்துக்கும் சிவன் மறைந்து இருந்து உதவுகிறான். அவன் இறந்த பிறகு சாரமாகிய சூக்கும உடலிலும் பொருந்தி விளங்குவான். நெய்யப் பெற்ற ஆடை, உரம் பெறுவது போல் வாசனா ரூபமான வினைகள் சிக்குண்டு கடல் போல் பெருகி விடுகின்றன. ஆன்மா சிவத்தை நோக்கிச் சிந்தனையைக் கடைவதாயே சப்திக்கின்ற நாத ஒலி உண்டாகி வினை கெடும் கோமத்து - ஆன்மா.

223. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
அங்கி இருக்கும் வகையருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ்அத வாமே.

பொருள் : அக்கினியைச் சிரசுக்குக் கொண்டு செல்லும் திறமுடையவர் வைதீக அக்கினியைக் காருக பத்தினியோடு கூட வளர்த்தவராவர். மறுமையில் பிரமலோகம் முதலியவற்றில் தங்கி இளைப்பாறவும் இம்மையில் மேல் ஓங்குகின்ற புகழும் அவர்க்கு உண்டாகும். அக்கினி காரியம் செய்பவர் இம்மை இன்பத்தோடு மறுமையிலும் இன்பம் பெறுவர்.

12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் ஒழுகும் முறை)

224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தம நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

பொருள் : அந்தணராகிய அறவோர் பிறப்பை அறுக்கும் தொழிலை யுடையவர். முன்னே சொன்னவாறு  அக்கினி காரியம் செய்து, மூன்று வேளைகளிலும் தவறாது தங்களுக்குரிய தவமாகிய நல்ல செயலைச் செய்துவிட்டு, ஒத்து எண்ணிச் சடங்கு செய்வோராவர்.

225. வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே.

பொருள் : வேதத்தின் முடிவான உபநிடதத்தின் உண்மையை அறிய விருப்பத்தோடு தத்துவமசி என்ற முப்பது அறிவின் முடிவான ஓங்காரத்துள் பொருந்தி, நாதம் கடந்ததாய், உபநிடதத்தின் உச்சியாய், அறிவுக்கு அப்பாலாய் விளங்கம் தலைவனை, இதுதான் முடிவு என்று எண்ணாது முப்பதத்தையும் கடந்து துரிய நிலையில் விளங்குவோராவர்.

226. காயத் திரியோ கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம்ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொருள் : காயத்திரியாய்க் கருதுகின்ற சூரியனாகிய சாவித்திரியை அதற்குரிய மந்திரத்தை எண்ணிச் செபிக்க அந்தணர் விரும்புவர். அன்பாகிய தேரில் ஏறிச் சென்று சிவமாகிய நேயப் பொருளோடு பொருந்தியவராய் தனு கரண புவன போங்களாகிய மாயா காரியங்களை விரும்பாது வென்று விளங்குவர்.

227. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளிர்பார்ப் பாரே.

பொருள் : முத்தி நெறியான பிரணவத்தைத் தெளிந்து குரு உபதேசம் பெற்று, மகாவாக்கியம் உணர்த்தும் அத்துவித நெறியில் அகவழி பாட்டில் இருந்து, பிரம சொரூபம் ஆயினோர் குற்றமற்ற அந்தணர்கள், பிரணவத்தை எண்ணி அமர்ந்திருப்பவர் பிரம சொரூபம் பெறுவர்.

228. சத்திய மும்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்உற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

பொருள் : மெய்ப்பொருளை அகத்தில் நோக்கித் தற்போதம் இழந்து, இளைப்பினைத் தரும் இந்திரியங்களைப் புலன்களின் வழிச் செல்லாது தடுத்தும் இருவினை ஒத்த உயிர்களாய் ஞானம் பெற்று, பந்தத்தை நீக்கிப் பிரமம் ஆவர். பிரணவத்தை உணர்ந்தோர் கட்டின்றிப் பிரமமாவர்.

229. வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

பொருள் : வேத முடிவான உபநிடதத்தை அறிய விரும்பிய அந்தணர் வேதாந்தத்தைக் கேட்டும் தம் ஆசையை விட்டாரில்லை. ஆசையை விட்ட இடமே வேதத்தின் முடிவாம்.வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவர் ஆசையை விட்டவர் ஆவார். ஆசையற்ற இடமே வேதாந்தம் ஆகும். ஒழிந்த இடம் என்பது ஒழிந்திடம் என்று திரிந்து நின்றது.

230. நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே.

பொருள் : சொல்லுமிடத்துப் பூணூல் அணிந்து சிகை வைத்திருந்தால் அந்தண்மை ஆகுமோ ? பூணூல் பருத்திப் பஞ்சு; சிறிய சிகை உரோமமாம்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் ஒன்றாக்கி உணர்வதே மறை முடிவு அதன் பயின் பிரம நாடி சிறந்து சிரசில் ஞானம் பிறக்கும். சொல்லுமிடத்துப் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூணூலைத் தரித்த அந்தணர் உணர்வார். நூலும் சிகையும் பூண்பதோடு அவற்றின் உண்மையையும் அறிய வேண்டும்.

231. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட்டு ஓரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

பொருள் : மெய்ப்பொருள் அறிவின்றி, தன்னை உணரும் ஞானமும் இன்றி, மனத்தோடு பொருந்திய விடய வாசனைகளை நீத்து உண்மையை உணர்கின்ற உணர்வுமின்றி, மெய்யான பத்தியுமின்றி, மேலான பொருள் ஒன்று உண்டு என்ற நினைவின்றி, அறியாமை நிறைந்த மூடர் அந்தணர் ஆவாரோ; ஆகமாட்டார்.

232. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே

பொருள் : மேன்மையான பிரணவ நெறியில் அறிவு அறியாமையின்றி, குரு உபதேசத்தினாலே திருவடியைப் பொருந்தி, பிரணவ நெறியில் செல்வதால் புறக்கிரியைகளை விட்டிருக்கும் தூய்மையான அந்தணர்க்கு ஒளியுடன் பொருந்தி நிற்றல் உண்டாம். தூய்மையான அந்தணர் ஒளியோடு பொருந்தி நிற்பர்.

233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தணர் ஆமே.

பொருள் : வேதங்களைப் பொருளுணர்ந்து ஓதுபவரே அந்தணராவார். ஆனால் மறையவரது வேதாந்தம் உண்மையாகத் தூய்மையுடையது. வேதமல்லாத மற்றைய குறையுடைய நூல்களைக் கற்றல் ஆரவாரத்துக்கேயாம் என்று அறிந்து ஒதுக்குபவர். மறையோதிய அந்தணராவார். அந்தணர் பிற நூல்களைக் கல்லாது வேதத்தையே ஓதுவர்.

234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளங் கொண்ட அருமையான வேத முடிவாகிய சிவத்தை இடைவிடாது நினைக்கும் அந்தணர் அடைகின்ற வளமான பூமி வளமை குன்றுதல் இல்லை. அந்நாட்டு அரசனும் நல்லவனாவான். காலை மாலையாகிய இருவேளைகளிலும் ஆகுதி செய்வார்கள்.

235. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

பொருள் : வேதாந்த நெறியில் நிராசையாக நின்று ஞானம் அடைய ஊழ் இன்றியவர், நாதாந்த முத்திபதம் எய்துவர். அறிவான் முடிவாம் ஞானம் உண்டாகிப் பரத்தைச் சேர்ந்து அடைந்தால் நாதாந்த முத்தியோடு இவ்வுலகில்சித்திகளும் பெறுவர். பரன்பால் அடையின் முத்தியோடு சித்தியும் கிட்டும்.

236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
கென்று வணங்கும் திருவுடை யோரே.

பொருள் : பிராணனும், உச்சுவாச நிச்சுவாசங்களும் அடங்கிய காலத்து, மகிழ்ச்சியாக இருந்து நன்மையே பல பேசிக் கொண்டிருந்தாலும் மேலான முத்தியைப் பெறும் செல்வர்கள் யாவற்றையும் கடந்து விளங்கும் சிவத்தையே நாடுவர். சிவத் திருவுடையோர் மேலான முத்தி அடைவர்.

237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
ஓம்மேவு ஓர்ஆ குதிஅவி உண்ணவே.

பொருள் : இறைவனை எண்ணிட அகப்பற்று புறப்பற்று ஆகிய இரண்டும் தானே நீங்கும். அகங்காரம் அறுபட்டு விடும். பின்னர் எது ஒன்றையும் தேடாது, பூவிலே பொருந்திய பிரமனைப் போலப் புண்ணியத்தை விரும்பியவனாய், ஆகுதி செய்யப்படும் அவியை உண்ணவே பிரணவம் பொருந்தும். ஆகுதி உண்ணவே பற்றுக்கள் நீங்கும்.

13. இராச தோடம் (அரசனுக்குரிய குற்றம்)

238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.

பொருள் : கல்வி அறிவு இல்லாத அரசனும் இயமனும் ஒருங்கு வைத்து எண்ணப்படுவர். ஆனால் கல்வி அறிவு இல்லாத அரசனைக் காட்டிலும் இயமன் மிகவும் நல்லவன். கல்வியில்லாத அரசன் அறத்தின் வழி ஆராயாமல் கொல் என்று ஆணையிடுவான். அறத்தின் வழி நிற்கும் நல்லவரை இயமன் நெருங்க மாட்டான்.

239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.

பொருள் : நாள்தோறும் அரசன் தன் நாட்டில் நன்னெறியினை முறையாக ஆராய்ந்து, அவன் நீதி முறைமையைக் செய்யாவிடின் நாள்தோறும் நாட்டின் வளம் குன்ற நாட்டு மக்களிடையே அறியாமை பொருந்தும். நாள்தோறும் அரசனது செல்வமும் குறைந்து கொண்டே வரும்.

240. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.

பொருள் : வேடத்துக்குரிய நெறியில் அகமும் புறமும் ஒத்து நில்லாதார் வேடத்தை மட்டும் பூண்டு கொண்டு என்ன பயன் ? ஆனால் வேடத்துக்குரிய நெறியில் பொருந்திவாழ்பவரது வேடம் உண்மையான வேடமாகும். வேடத்துக்குரிய நெறியில் நில்லாதவரை வலிமை மிக்க அரசன் தண்டனை முதலியவற்றால் வேடத்துக்குரிய நெறியில் நிற்கச் செய்தால் அது வீடு பேற்றை அளிக்கு வழியாகும்.

241. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன்று இலனாகும் ஆதலால் பேர்ந்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.

பொருள் : அறியாமை கெடாதவர் சிகை, பூணூல் முதலிய வேடங்களைக் கொண்டால் மண்ணுலகத்தில் உள்ளவர் வாடுவர். பெருவாழ்வு வாழ்கின்ற அரசனும் பெருமை இல்லாதவன் ஆவான். ஆதலால் வேடத்தின் உண்மையை மீண்டும் ஆராய்ந்து அறிந்து ஆடம்பரமாக அணியும் பூணூலையும் சிகையையும் களைந்துவிடுதல் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.

242. ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொருள் : ஞானத்தை அடையாதவர் சடையும் சிகையும் பூணூலும் பெற்று, ஞானிகளைப் போல நடிக்கின்றவர்களை, ஞானிகளைக் கொண்டே இவரது உண்மையினை அரசன் சோதித்து ஞானம் பெறும்படி செய்தால் நாட்டுக்கே நன்மை உண்டாகும்.

243. ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

பொருள் : பசுவையும் மகளிரையும் மற்றும் அறநெறியில் நிற்பவரையும் தேவரும் வணங்கத்தக்க உண்மையான தவ வேடத்தாரையும் அரசன் காத்தற்கு உரியவன். அவன் காக்கவில்லையாயின் அவன் மறுமையில் நித்திய நரகத்தை அடைவான்.

244. திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில்ஒன்று ஆமே.

பொருள் : மேன்மையான மறுமைக்குரிய முத்தியும், இம்மைக்கு உரிய செல்வமும் வேண்டினால் அரசன் எப்போதும் நாட்டில் அறத்தையே நிலை நாட்ட வேண்டும். சிறந்த கடலால் சூழப் பெற்ற உலகில் வாழ்கின்ற மக்கள் ஆகியோர் செய்கின்ற நல்வினை தீவினைப் பயன் யாவும், சொல்லப்புகின் அரசனுக்கு நன்மையோடு தீமையினும் ஆறில் ஒரு பங்கு உண்டாகும்.

245. வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

பொருள் : அரசன் உலகைக் காப்பது மிக நன்றாய் இருக்கிறது. அங்குள்ள மக்களும் அரசனைப் போன்றே இருப்பர். மாறு கொண்டு இவனது நாட்டைப் பிற நாட்டான் கைப்பற்றவும், பிற நாட்டைத் தான் போரிட்டுக் கைப்பற்றவும் இவன் விளைவு அறியாது பாய்கின்ற புலி போன்ற கொடியவனாவான். அரசன் யுத்த வெறி பிடித்து அலைவது குற்றமாகும்.

246. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொருள் : பிராணனது இயக்கத்தைத் தடுத்து, மூலாதாரத்திலுள்ள மூலக்கனலைச் சிரசின்மேல் செலுத்தி, அங்குக்காணும் பால் போன்ற வெண்ணிற ஒளியைக் கொண்டு மதிமண்டலம் அறிந்து அங்கு உண்டாகும் ஆனந்தத் தேனைப் பருகாதவராய் ஆனந்தம் விளைக்கும் என்று மயக்கம் கொண்டு கள்ளினை உண்ணும் மருட்சியாளரை மேலும் இப்பழக்கத்துக்கு ஆளாகாதபடி செய்த அரச தர்மமாகும்.

247. தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.

பொருள் : தத்தமக்குரிய சமயநெறியில் நில்லாதவர்களைச் சிவன் அருளிய ஆகம முறைப்படி, அப்பெருமான் மறு பிறப்பில் அத்தகைய தண்டனையைக் கொடுத்துத் திருத்தும். இப் பிறப்பிலேயே தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது அரசனது கடமையாகும்.

14. வானச் சிறப்பு (மழையின் பெருமை)

248. அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

பொருள் : அமுதத்தைப் போன்று வளப்பத்தைத் தருகின்ற மழைப் பெருக்கால், சுவையையுடைய பல மரங்கள் உலகத்தில்மேல் உண்டாகும். பாக்கு, இளநீரையுடைய தென்னை, கரும்பு, வாழை, அமுது அளிக்கும் சமாதி நிலைக்கான எட்டி முதலியன உண்டாகும். காஞ்சிரை - சமாதிக்குரிய மூலிகை.

249. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

பொருள் : சிரசாகிய மலையினின்றும் பெருகி வரும் ஒளிமயமான ஆகாய கங்கையை உரைப்பதற்கு உரையில்லை. அது மனமண்டலத்தில் அன்பினால் ஊறும் பிருதிவிக் கலப்பின் மையால் நுரையில்லை அழுக்கில்லை யாதலின் தெளிந்த தன்மையுடைய நீர் எந்தையாகிய பாவங்களைப் போக்குகின்ற ஆறு அகண்டமாதலின் கரை இல்லை.

15. தானச் சிறப்பு (பிறர்க்கு இயன்றளவு கொடுத்தலின் பெருமை)

250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொருள் : யாவராயினும் கொடுங்கள்; அவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் என்று கருதாதீர். வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். பழமையைப் போற்றாதீர்கள். இம்மை மறுமையில் விருப்பம் உடையவரே ! மிக வரைந்து உண்ண வேண்டா. காகங்கள் உண்ணும் காலத்தில் பிற காகங்களை அழைத்து உண்பதை  அறியுங்கள். பழமையைப் போற்றாமையாவது அருமையுடைத்துது என்று பாதுகாவாமை.

16. அறஞ்செய்வான் திறன் (இல்லையென்னாது ஈவாரது தன்மை)

251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

பொருள் : தம்மை அறிவார் இறைவன் திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவரே அறம் செய்யும் நெறியில் நின்றவராவர். தம்மை அறிபவரே உண்மையை உணர்பவர் ஆவர். தம்மை அறிவார்க்கு இறைவனே உறுவினனாக உள்ளான்.

252. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொடு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

பொருள் : உண்ணுவதற்கு முன்னே இறைவனுக்குப் பச்சிலை கொண்டு பூசித்தல் யாவர்க்கும் ஆகும். அவ்வாறே பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் ஆகும். அதே போல் உண்பதற்கு முன்னே சிறிதளவு பிறர்க்குக் கொடுத்தல் ஆகும். இல்லையெனில் பிறர்மனம் நோகாதவாறு இனிமையாகப் பேசுதல் யாவர்க்கும் ஆகும் எல்லோரும் செய்யக் கூடிய எளிமையான அறம் கூறியவாறு.

253. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொடு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.

பொருள் : இருவகைப் பற்றும் அற்று நின்ற சிவஞானியாருக்கு அளிக்கும் உணவே அறம் என்று நூல்கள் கூறும் அங்ஙனமிருந்தும் கல்வியால் உண்டான அறிவு விளங்கும் மனிதர்கள் பார்த்திருந்து கிணற்றங் கரையிலோ குளத்தங் கரையிலோ தங்கியுள்ள சிவஞானியாரை அழைத்துவந்து உண்பிக்கும் பயன் அறியவில்லையே. பற்றற்ற ஞானியரை உண்பிப்பதே சிறந்த அறமாகும்.

254. அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

பொருள் : அறம் செய்யா உள்ளத்தை உடையோரே ! காமம் வெகுளி மயக்கம் ஆகிய அழுக்கினை அகற்றி அறிவினைப் பெருக்கவில்லையே செல்வம் தழுவிய நாளில் அறமும் செய்யவில்லை. உலக நோக்கில் காலத்தைக் கழித்து என்ன செய்யப் போகிறீர். இவ்வுடல் எரிந்து அழியும் பாது அறஞ்செய்யாது காத்தவை என் ஆகும் ? சிந்தியுங்கள்

255. தன்னை அறியாது தான்நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையின் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொருள் : சர்வ வல்லமையுடன் உயிரை உடலினின்றும் பிரிக்கும் காலன்; உன்னுடைய நிலையை அறியாது; நீ நல்லவன் என்றும் கருதாது; இங்கு உனக்குற்ற வறுமையும் உணராது; நீ வயதில் இளையவன் என்று கருதிடாது; ஆதலால் நீர் காலன் வந்து உயிரைக் கொண்டு போவதற்கு முன் உடலை நிலை பேறாகச் செய்யும் நல்ல தவத்தினைச் செய்யும்.

256. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறியாரே.

பொருள் : துறந்தோர்க்கு இவ்வுலகில் ஒருவித உறவும் இல்லை. இறந்தவர்க்கு இவ்வுலகப் பொருள்களினால் எவ்வித இன்பமும் இல்லை. இம்மையில் அறஞ் செய்யாது மறந்தவர்க்கு வழித் துணையாக ஈசன் வருவதில்லை. இம் முத்திறத்தினரும் அறத்தினைச் செய்யும் முறையை அறிய மாட்டார்.

257. தான்தவம் செய்வதாம் செய்வத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வ மென்று நமன்வரு வானே.

பொருள் : அறிவையே தெய்வமாகக் கருதும் மனிதர்கள் முற்பிறப்பில் செய்த தவத்தின் வழி தாம் தவஞ் செய்து மேன்மையடைவர். உடம்பே தெய்வமென்று கருதி வாழ்கின்ற உயிர்க் கூட்டம் நான் தெய்வமென்று இயமன் வருவகை அறியாது அழிவர். மான் - புத்திமான். உடம்பைப் பெரிதெனப் பேணி அறம் செய்யாதவர் அழிவர்.

258. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறும் மேற்றுணை யாமே.

பொருள் : நம்மை ஆழ்த்துகின்ற வினையாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குரிய தோணியாக இருந்து நமக்கும் நமது சுற்றத்தார்க்கும் களைப்பினைப் போக்கிக் காக்கும் இரு வழிகள் உள்ளன. அவை அழியாப் புகழினையுடைய அச்சிவத்தினைப் பற்றி நின்று ஆற்றப் பெறும் தவம் ஒன்று; இல்வாழ்க்கை பற்றி நின்று செய்யும் அறம் மற்றொன்று இவையே மறுமைக்குத் துணையாவன. முத்திக்குரிய வழி அறமும் தவமும் ஆகும்.

259. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்றுஉங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொருள் : பற்றுக்கோடு அதுவேயாய் நின்ற மெய்ப்பொருளை உலகில் குறை கூறாதவனாய் அறநெறி அல்லது பிறநெறியில் செல்லாது பொருந்தி நீங்கள் பிறர்க்குக் கொடுத்த ஒன்றுமே துணையாகும். அதுவே சிவம் வைத்த முத்தியடைதற்குரிய வழியாகும்.

17. அறஞ்செயான் திறம் (தருமம் செய்யாதவரது இயல்பு)

260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஓட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண்டு ஈட்டிய மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

பொருள் : பொருந்திய நல்ல அறங்களைச் செய்யாதவரது செல்வம் எட்டி மரத்தினது பெரிய பழம் பழுத்து விழுந்து பயன் படாது கிடந்தது போலாம். வட்டி வாங்கி ஈட்டி உலகில் பிறர்பொருளைக் கவர்ந்திடும் வஞ்சனையுடைய பாதகர்கள் செல்வத்தின் பயனை அறியாதவராவர்.

261. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தன; பலப்பல ஊழியும் சென்றன எத்தனையோ மனக் கோட்டைகளை தகர்ந்தன; வாழ்நாளும் குறைந்து, சத்து நீங்கின. சக்கைபோலப் பிழியும் துன்பத்தைத் தருகின்ற தம் உடம்பு பயனற்று அழிவதைப் பார்த்தும் உலகினர் அறத்தின் மேன்மையினை அறியாது உள்ளனரே !

262. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொருள் : உலகில் பலர் அறம் இன்னதென்று அறிகிலர். அறத்தின் பயனாக விளங்கும் இறைவன் திருவடியை எண்ணும் முறைமையையும் அறியவில்லை. சிவநகருக்குப் பக்கமாகிய சொர்க்காதி நிலைகளையும் அறியார். உலகாயதர் போன்றோர் கூறும் பொய்மொழிகேட்டு இவ்வுலகப் பொருளை விரும்பிப் பாவ காரியங்களைச் செய்வார். அதனால் பிறப்பு இறப்பாகிய பகையைப் பொருந்தி நின்றார்கள்.

263.  இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம்செய் யாதவர் தம்பால தாகும்
உரும்இடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே

பொருள் : இருமலும் சோகையும் கோழையும் சுரமும் ஆகியவை தருமம் செய்யாதவரைச் சென்று அடையும். மரணம் விளைக்கும் மின்னுலும் இடியும் பாம்புக் கடியும் தொண்டை நோயும் வயிற்றுக் கட்டியும் ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் அணுகா.

264. பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

பொருள் : உலகாயத மதத்தின் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார் இறைவனை வழிபடமாட்டார். இனி, தம்மை நோக்கி வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார் வழிப்போக்கர் தங்கச் சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்யார். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே ! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ ? நல்நெஞ்சினீர் - வஞ்சப் புகழ்ச்சி.

265. வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
ஒழிடப் பார்வினை ஓங்கி நின்றாரே.

பொருள் : அறவழியில் நடப்பவராக இல்லாமல் தேவருலக இன்பம் நீங்கும் வண்ணம் தீயவழியில் நடப்பவர் இருள் சூழ்ந்து உலகமாகிய நரகத்தில் நடப்பவராவர். காமம் வெகுளிமயக்கம் ஆகிய குற்றங்களைக் களைந்து அவற்றினின்றும் நீங்கிச் சன்மார்க்கத்தில் நிற்பவர். வினை கடந்து நின்றவராவர்.

266. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன்று இன்றி
மெலிந்த சினத்தினினுள் வீழ்ந்துஒழிந் தாரே.

பொருள் : எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவர் இறைவனது திருவடியை காண்பர் விரக்திகொண்டு உலகினை விட்டுத் துணிவுடன் தவம் செய்தவர் மாயுச்சிய நிலையை அடைவர். உலக நிலையில் நின்று அறன் அருளின்றி மாள்வர். காலனுடைய சினத்துக்கு ஆளாகிப் பயத்தைத் தரும் நரகில் வீழ்ந்து அழிவர்.

267. இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொருள் : உலகில் இன்பமும் துன்பமும் ஆகிய இரண்டும் பொருந்தியிருப்பது, முற்பிறப்பில் அவரவர் செய்த அறச் செயலுக்கும் மறச் செயலுக்கும் ஏற்ப அமைந்த தாகும். அறத்தினால் இன்பம் அடைதலைக் கண்டு வைத்தும் கொடுப்பது அறியாப் பேதைகள் அன்பில்லாத சிந்தையுடையராய் அறத்தினை அறிய மாட்டார்.

268. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்துஇன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

பொருள் : கேட்டினையும் ஆக்கத்தினையும் ஊட்டச் செய்கின்ற கேடில்லாத இறைவன் நேர்மையற்ற செயலைச் செய்து இன்பம் பெற அனுமதிக்கவும் மாட்டான். ஆகவே, தக்கார்க்கு இடுதலையும் வறியார்க்கு ஒன்று ஈதலையும் நினையுங்கள். (பிறர் இன்பம் கெடும் படியாக நடப்பது மிருகத் தனமாகும்)

269. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் பேற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

பொருள் : சிலருக்கும் பலருக்கும் வாழ்வு தருகிறோம் எனத் தருக்கும் அற்ப அறிவுடையாரை, அவரது அழிகின்ற செல்வத்தைக் கருதி வாழ்த்தி வாடாமல், அழியாத செல்வமாகிய வீடு பேற்றினை அளிக்கும் இறைவனைக் கருதி வாழ்த்துங்கள் வில்லானான் எய்த அம்பு இலக்கினைத் தவறாது அடைவது போல உங்களது வறுமையைத் தவறாது போக்கி இன்பம் தருவான்.

18. அன்புடைமை (இறைவன்பால் கொள்ளும் அன்பை உடைமை)

270. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொருள் : அனுபவம் இல்லாதவர் அன்பாகிய சத்தியும் சிவமாகிய அறிவும் இரண்டு பொருள் என்பர். அன்பின் முதிர்வினால் தோராகிய எல்லோரும் உணர்வதில்லை. அன்பு தான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்தபின் அன்பே வடிவாய்ச் சிவமாந்தன்மை எய்தியிருந்தார்.

271. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுகொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொருள் : பொன்னினும் பிரகாசமுடைய புலித்தோலின் மஞ்சள் ஒளியில் விளங்குபவன்; பளிச்சென்று பிரகாசிக்கும் சிற்றொளியையுடைய பிறையானது, பொருந்தியிருந்த வெண்ணீற்று ஒளியில் திகழ்பவர் இத்தகைய கூத்தனுக்கு என்னுடைய பேரன்பு  கலந்திருந்தது.

272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கின்ற
என்போன் மணியினை எய்தஒண் ணாதே

பொருள் : எலும்பையே விறகாகக் கொண்டு உடம்பின் தசையை அறுத்து நெருப்பிலிட்டுப் பொன்னைப் போலக் காய்ச்சி வறுத்தாலும், அன்போடு உருகி மனம் நெகிழ்வார்க்கு அல்லது என்னைப் போல இறைவனை அடைய முடியாது.

273. ஆர்வர் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொருள் : மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர். அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர். சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய சாகரத்தில் உழல்வர். அன்பில்லாத அவர் துன்பமாகிய காட்டகத்தே நெறியறியாது திண்டாடுவர். கொங்கு - காடு.

274.என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கி பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலைநின்ற வாறே.

பொருள் : பலபேசி என்ன பயன் ? அன்பினால் மனத்தை உருக்கி இறைவனை ஏத்தி வழிபடுங்கள். தலையாய் அன்பினால் மனத்தை உருக்கித் தலைவனை நாடுங்கள். அவ்வாறு நாடிய எனக்குப் பெருமையுடைய குரு நாதனும் பாசத்தைப் போக்கி தனது கருணையை என்னிடத்துக் காட்டும் வகை இவ்வாறாம்.

275. தானொடு காலம் சயம்புஎன்று ஏத்தினும
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொருள் : சிவன் தானே ஒருவனாய் நின்ற நாளில் சுயம்பு என்று எண்ணி வழிபடின், வானத்தில் ஒரு காலத்தில் பொருந்தி வழிபடுவார்க்கு உற்ற துணையாய் இருக்கும். தேனையொத்த இன்பந் தரும் சத்தியை ஒரு பக்கத்தில் உடையவனாகப் பொன்னொளியில் விளங்கும் சிவன் தானே ஒரு நிறத்தைப் பெற்று எனது அன்பு வலையில் அகப்பட்டு நின்றான்.

276. முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

பொருள் : உலகினைப் படைத்து எல்லா இன்பங்களையும் அமைத்தருளிய இறைவனிடம், அன்பினைச் செலுத்தி எல்லா உயிர்க்கும் தலைவனாகிய இறைவனை அறியாமல் கெடுகின்றனர். உறுதியைத் தந்து இவ்வுலக வாழ்வில் அன்பைப் படைத்த பெருமான் அகண்ட உலகமாகவும் உள்ளான். சிவன் போகமாகவும் புவனமாகவும் உள்ளான்.

277. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன்என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

பொருள் : கருத்திலே பொருந்துகின்ற உருக்கு முகத்துப் பிரகாசிக்கும் செம்பொன்னைப் போன்ற சோதி வடிவானவனை நினைத்தும் அமைத்து வைத்தும் அவனையே தலைவன் என்று ஏத்தியும், உள்ளத்தில் அன்பு கொண்டு அவனை யார் அருள் வேண்டினாலும் தேவர் தலைவனாகிய அப்பெருமான் அவ் வொளியில் நின்று சிவவொளியைப் பெருகச் செய்வான்.

278. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசுஅறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே.

பொருள் : உயிர்களின் வினைக்கீடாக நாளும் இறப்பையும் பிறப்பையும் அமைத்தவன் வைத்த முறைமையினை அறிந்திருந்த மக்கள் உலக போகத்தில் விருப்பத்தைச் செலுத்துவர். எந்தை எம்பிரான் என்று விரும்பி அண்ணலாகிய சிவனை நாடவில்லை.

279. அன்பின்உள் ளான்புறத் தான்உட லாயுள்ளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

பொருள் : தன்னை அறியும் அறிவு கொண்டவரிடம் அவ் அன்பில் நின்றருளுவான். தன்னில் நிற்பது போலவே பிறரிடம் நிற்பவனும் அவனே. அன்பே உடலாக உள்ளவன். உலகத் தோற்றத்துக்கு முன்னும் உலக அழிவுக்குப் பின்னும் அழியாது நிற்பவன். ஆத்ம விசாரணை செய்யும் முனிவர்க்கும் அவனே தலைவன். அவனிடம் யாரொருவர் அன்பு கொண்டாரோ அவரிடம் நிலையாகப் பொருந்தும் அரிய பொருளாயுள்ளவன். அன்பின் வழி அணுகுவோர்க்கு அவன் துணையாக இருந்து உய்விப்பான்.

19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (அன்பே சிவமாவது என்பதை அறிவாரைச் சிவன் அறிவான்)

280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

பொருள் : உயிர்கள் தன்மாட்டு அன்பு செய்தலை இகழ்ந்ததையும் மெய்யன்பு கொண்டிருந்தலையும் இறைவன் அறிவான். மேலோனாகிய அத்தலைவன் அதற்கேற்ப மகிழ்ந்து அருள் செய்வான். தன் மாட்டுத் தளிர்த்து வரும் அன்பினைப் புரியவல்லார்க்கு மகிழ்ச்சி கொண்டு அன்பு செய்யும அளவுக்கு அருளை வழங்குவான்.

281. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

பொருள் : மக்கள் பேரின்பம் அடையப் பிறவியில் இயல்பான பல சாதனைகளைக் கொடுத்த இறைவன், துன்பம் நிறைந்த பிறப்பில் இவர் எத்தொழிலைச் செய்தாலும் செலுத்துகின்ற அன்பில் கலக்க ஆதியாகிய பெருமான் முன்னே அமைத்துக் கொடுத்த பிறவியானது முடிவடையும்.

282. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணிஐந்து ஆடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொருள் : அன்பு பொருந்திய சிந்தையின் மேல் விளங்கும் சிவமாகிய ஒளி, இன்பம் வழங்குகின்ற கண்ணையுடைய இச்சத்தியோடு அன்பரை ஏற்று அருள்புரியத் திருவுளங் கொள்வான். அவ்வாறு ஏற்கத் திருவுளங் கொண்டமையின் வலைபோன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அப்பொழுது நன்மை பெற்ற சிந்தையை நீங்கள் இறைவன் பால் தொடர்பு கொண்டு துன்புறு கண்ணியை அகற்றி நில்லுங்கள்.

283. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

பொருள் : சிற்றின்பத்தில் மகளிர்மேல் வைத்த அன்புபோல், சிரசின் மேல் உதிக்கும் பரிச உணர்வில் மனம் பதிவுண்டு இருக்க வல்லார்க்கு, உணர்வு கெட்டு நாதத்தோடு பொருந்தித் துவாத சாந்த வெளிக்குச் சென்று கூடலும், அங்குப் பெறும் பேரின்பம் இங்குப் பெற்ற சிற்றின்பம் போல இருக்கும்.

284. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொருள் : முன் மந்திரத்தில் கூறியவாறு பேரின்பத்தில் திளைத்திருந்தாரோடும் விளங்கும் சோதியாகிய இறைவனைச் சித்திகளை யுடையவர் என்று ஆராய்ச்சியினால் அறிந்து விட முடியாது. ஆனால் அடியார்கள் பத்தியோடு அவன் அருளாலே அவனை வணங்க அவர்கட்கு வீடு பேற்றை அளித்து அவர்கள் முன்பு விளங்கித் தோன்றினான்.

285. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

பொருள் : வாசனைதரும் கொன்றைப் பூப்போன்ற மஞ்சள் ஒளிக்கிரணத்தை உடையவனைக் கண்டேன். காரிருளாகிய ஆணவமான யானையைக் கிழிஞூததவனுடைய திருவடிகளைக் கண்டேன். மூலாதாரக் கமலத்தில் விளங்குபவனைக் கண்டேன் எனது அன்பில் அவனது திருவடிகள் விளங்குவதை நான் கண்டேன்.

286. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத்து இடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

பொருள் : நம்பத் தகுந்தவனும் எல்லாப் பொருளாகவும் உள்ளான் என்று வானுலகில் தேவர்கள் போற்றும் தலைவனும் இன்பவடிவானவனும், சீவர்களது இன்பத்தில் பொருந்தி மகிழ்கின்ற அன்பு வடிவானவனும் ஆகிய இறைவனை யாரும் அறிய முடியவில்லை. இரதித்தல் - சுவைத்தல்; மகிழ்தல்.

287. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

பொருள் : நந்தியாகிய இறைவன் இன்பத்தால் வந்த பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முன்பு அவனை வணங்கிப் பிறப்பு இறப்பு அறியாத ஞானியர், அன்பினால் இறைவனை வழிபட்டு நாங்கள் அவனை உணர்ந்திருக்கின்றோம்  என்பர். அங்ஙனமிருந்தும் ஏனையோர் அவனை உணர்ந்து பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள அறியவில்லையே !

288. ஈசன் அறியும் இராப்பக லும்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற்று இருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

பொருள் : இரவும் பகலும் இடைவிடாது அவனை அன்பினுள் வைத்துப் போற்றுபவர்களை இறைவன் அறிவான். ஆதலால் நாம் ஒளிபெற்று ஒளியில் நின்று நம்கென ஒரு செயலின்றியிருப்பின் இறைவன் எழுந்தருளி வந்து நம்மிடை பிரிப்பின்றி உடன் உறைவான்.

289. விட்டுப் பிடிப்பதுஎன் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாய் பெருமையை
எட்டும்என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

பொருள் : மேலாகிய ஒளிவடிவாகிய இறைவனை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் எதற்காக ? அவனைச் சிக்கெனப் பற்றிக் கொண்டு அவன் வழியே நான் செல்வேன். அங்ஙனம் எல்லையில்லாப் பெருமையைப் பெறுவேன். எனது உயிருக்குயிராய்க் கலந்து நின்ற இறைவனை இனிமையாகக் கலப்பதே நீராடலாகும்.

20. கல்வி (சிவானுபவத்தைத் தரும் கல்வி)

290. குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

பொருள் :  உடல்வந்த காரணத்தை அறிந்தேன். உயிர் அந்த உடலோடு பொருந்திச் செறிந்துள்ளதை அறிந்தேன். அதனால் தேவ தேவனாகிய இறைவனும் எவ்விதமான தடையுமின்றி என் மனத்தைத் தனக்கு இடமாக்கிக் கொண்டான். உவர்த்தல் இல்லாத மிகுகின்ற அனுபவ அறிவைப் பெற்றேன்.

291. கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரை செய்யுங்
கற்றி காட்டக் கயல்உள வாக்கும்

பொருள் : உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று.

292. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின் செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக்கு ஆமே.

பொருள் : எடுத்த உடலில் உயிருள்ள போதே உடல் நிலையாமையை உணர்ந்து உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையான போருளான இறைவனுடைய ஞானத்தைப் பெற முயலுங்கள். உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். சொல்லில் வழுவின்றி இறைவனை ஏத்துங்கள். அவ்வாறு ஏத்தினால் ஒப்பிட்டுக் கூற முடியாத சுய சோதியான சிவன் விளங்கித் தோன்றுவான்.

293. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்துமின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

பொருள் : உண்மையில் பிரணவ அறிவில்லாத உலகியல் கல்வி கற்றவர்கள் பிரணவத்தினின்றும் விலகிய வழியில் செல்கின்றனர். உலகியல் பற்றுடையோர் குண்டலியின் ஆற்றலைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை நினைந்து வழிபாடு செய்யுங்கள். இரசவாதம் செய்யப்பெற்ற பொன்போலக் குண்டலினி ஆற்றலால் அழியா உடல் (பிரணவ தேகம்) அமையும்.

294. துணைஅது வாய்வரும் தூயநற் சோதி
துணைஅது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணைஅது வாய்வரும் தூயநற் கந்தம்
துணைஅது வாய்வரும் தூயநற் கல்வியே.

பொருள் : இறைவழிபாடு செய்வார்க்குத் தூய்மையான சோதி துணையாக வரும். நல்ல பிரணவம் அவர்களுக்குத் துணையாக விளங்கும். சுக்கிலம் கெடாது தூய்மையுற்று உடலுக்கு உறுதுணையாய் ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் இருந்து வீடு பேற்றை அளிக்கும்.

295. நூல்ஒன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பால்ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோல்ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால்ஒன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொருள் : உடம்பிலுள்ள சுழுமுனை நாடியைப் பற்றிச் சிரசின் உச்சிடல் பிரமரந்திரம் செல்ல மாட்டாதார், காம விகாரம் கொண்டால் சிவ யோகத்தில் பயன் கிட்டாது கெடுவர். முதுகந்தண்டைப் பற்றிச் சிரசின் மேல் சென்றவரிடம் இந்திரியங்கள் சேட்டை செய்யா. இதனை அறியாமல் கீழேயுள்ள தத்துவங்களின் இயல்பில் மயங்கி நன்மை அறியாமல் கெடுகின்றனர்.

296. ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

பொருள் : சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவம் நாத தத்துவத்தில் வெளிப்படுவான். நாதத்தில் விளங்கும் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும். அவ்வாறு பொருந்திய சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு, தகுதிவாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும்.

297. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உலகு ஏழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

பொருள் : ஞானம் பெற வாயிலாகப் பிறவி நோய்க்கு மருந்தாக இருந்த நூலேணி பற்றியோர் முன்பு அவ்வாறு பற்றாதவர் கழிக்கப்பட்ட துணையாகும். பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான் சிந்தையின் பழைய நிலையை ஒழிக்கத்தக்க துணையாவான். தேவ சொரூபம் பெற்று ஏழ் உலகங்களுக்குச் செல்லும் வழித்துணையாகவும் உள்ளான்.

298. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிறண கிளரொளிவானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொருள் : வாழ்வில் பற்றுக்கோடாக ஒரு தெய்வத்தை வழிபட வேண்டில் மேலான சிவபெருமானையே பற்றி வழிபடுங்கள். முழுமுதல் கடவுளாகிய அவனது அருளைப் பெற்று விட்டால் எல்லாம் இனிது முடி எய்தும். உபாயத்தில் வல்ல மிகுந்த தேசுடைய தேவர்கள் அனுபவக் கல்வியடையோரைக் காட்டிலும் பேரின்பம் பெற்று நின்றாரோ ? இல்லை.

299. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதோ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்இருந் தானே.

பொருள் : பரந்த கடலைத் தனக்குச் சொந்தமாக உடையவன். அதே போன்று உயர்ந்த மலையையும் உடையவன். ஐம்பூதங்களையும் தனக்குத் திருமேனியாக உடையவன். இப்பூதங்கள் அழிந்து மாறுபடும் போது பல தடவைகளிலும் ஒளியே வடிவான இடபத்தில் விளங்கும் தேவதேவன். தன்னையே நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தின் ஒளியில் அவனிருந்து அருளுவான்.

21. கேள்வி கேட்டமைதல் (வல்லோர் பால் சென்று கேட்கத் தக்கனவற்றைக் கேட்டு, மனம் அடங்கியிருத்தல்)

300. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொருள் : நீதிகளைக் கேட்டும் அந்தணர்களது அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள் இவையெனக் கூறும் நீதி நூல்களைக் கேட்டும், தேவ உபாசனைக்குரிய மந்திரங்களைக் கேட்டும், பிற சமய நூல் கேட்டும், பொன் என்று உரைக்கப் பெறுகின்ற திருமேனியையுடைய எம் பெருமானது தன்மையினைக் கேட்டும் சிவகதி தானே பெற்றதாம்.

301. தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.

பொருள் : எல்லாத் தேவர்களுக்கும் தலைவனான் சிவபெருமானும் ஒளியான திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை எவர் ஒருவர் அறிபவர் ? அவ்விதம் ஒளியாக அறிந்தபின் சிவத்தை உணர்த்தும் நூல்களைக் கற்று அறிவியுங்கள். பின் கற்றவற்றையும் கேட்டவற்றையும் சுய அனுபவத்தில் வைத்து உணருங்கள். சுய அனுபவத்தில் உண்மையை உணர்ந்தவர் நிட்டை கூடிச் சிவத்துடன் பொருந்தி உயர்ந்தோராவர்.

302. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது  அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பொருள் : மாட்சிமையுள்ள சிவனை வேண்டினால் திருமால் பணி செய்வான். சிவனுக்குப் பணி செய்தால் பிரமனும் ஏவல் வழி நடப்பான். சிவன் ஆணைவழி நிற்போர் தேவர் ஆகவும் ஆவர். சிவத்தின் ஆணையை அறிந்து பணி செய்தலின் பயன் திருவடிக்கண் நீங்காத பற்றாகும்.

303. பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

பொருள் : தலைவன் இவனே என்று பேசிக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானம் பெற்ற மனிதர்கள் பிறகு தேவராவர். அருமையான மாதவத்தனாகிய எங்கள் சிவபெருமான் மனிதராய்த் தேவராய் மேல் நிலைக்கு எய்திவரும் மேலான தவமுடையார்க்கு உவந்து அருள் செய்வான்.

304. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமும் ஆகும் நிகழ்ஒளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொருள் : இறப்பும் பிறப்பும் இறைவன் வினைவழி அருளுவான். இத்தன்மையினை அறிந்து பிறர்க்கு உரைத்தும் தானே பேசியும் களிப்புற்று அன்பு செலுத்தி இருங்கள். அவன் சிவசோதியாய் இருந்து சுவாதிட்டானமாகிய மலரில் விந்துவாகிய மணத்தில் பொருந்தி அருளிக் கொண்டிருக்கிறான். கந்தம் - விந்து.

305. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம் தாமே.

பொருள் : சிவனது பெருமையும் அதனைப் பற்றிய கேள்வியும், அக்கேள்வியால் உண்டான் ஞான ஒழுக்கமும் மனத்தில் சிந்திக்கின்ற காலத்து, நிலையில் திரியாது அடங்கியிருப்பின், தேவர் தலைவனாகிய இறைவனும் குறைவின்றி அளவற்ற காலம் அருள் புரிபவன் ஆவான்.

306. சிறியார் மணற் சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவர் அன்றே.

பொருள் : உலகத் தொடர்பால் இறை அனுபவம் உண்டாகும் என்று சொல்வது சிறு குழந்தைகள் (சிறுவீடு கட்டி) மணலால் சோறு சமைத்து உண்டு மகிழ்வது போலாம். சுட்டியறிய முடியாத சிவனது அகண்ட வியாபகத் தன்மையை உணராதார் தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறியாதவர் ஆவர் அல்லவா ?

307. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கின் பிறப்பில்லை தானே.

பொருள் : உடம்புக்கு உற்ற துணையாக இருப்பது உயிராகும். உயிருக்கு துணையாக இருப்பது உலகில் ஞானியர்பால் பெறுகின்ற கேள்வியாம். அக்கேள்வியால் சிவனது திருவடியைப் பற்றி எண்ணியிருத்தலே தக்க துணையாகும். இத்தகைய பெறுதற்குரிய துணையைப் பற்றிக் கேட்பின பிறப்பு இல்லையாகும்.

308. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு ஆமே.

பொருள் : புகழ்ந்து பேசப் பெறுகின்ற பிரமன் விஷ்ணு உருத்திரன் ஆகியோர்க்கும் பழமையானவன் எம் இறைவனாவான். தன்னை இகழ்ந்து கூறுகின்றவர்க்குத் துன்பத்துக்கு இடமாக இருப்பவன். ஆதியாகிய எம் தலைவனை மகிழ்ச்சியுடன் அவனது பெருமையை உணராது விலகி நின்றவர்க்கு, அவன் கல்லில் செதுக்கிய பசுவைப் போலப் பயன்பட மாட்டான்.

309. வைத்துணர்ந் தான்மனத் தொடுவாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றோடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலும் ஆமே.

பொருள் : ஆன்மாக்கள் இடமாகத் தனது சத்தியைப் பதிப்பித்தருளிய சிவன், அச்சத்தியால் மனத்தொடு வாக்கையும் அவற்றோடு பொருந்தி யிருந்து உணர்கின்றான். அவனது வடிவம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. எனினும் உடம்பாகிய அச்சிலிருந்து மனத் திட்பமாகிய ஆணி கழன்று உருக் குலைந்த காலத்து, ஆதியாகிய சிவனை விரும்பி நின்றவர்க்கே அவனை நெருங்கி அனுபவிக்கலாகும்.

22. கல்லாமை (கற்றும் சிவானுபவம் பெறாமை)

310. கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே.

பொருள் : ஆசிரியர்பால் சென்று முறையாகக் கற்காமல் பண்டைய தவத்தால் அவர்களது கருத்தில் தெய்வக் காட்சியை உணர வல்லாராயின், அவர்கள் இறைவன் அருளால் அனுக்கிரகம் செய்யப் பெற்றவராவர். இத்தகையோர் (அனுபவமுடையோர்) உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர். முறையாகக் கல்வி கற்றோரும், கல்லாதவராகக் கருதப்பட்டவர் பெற்ற அனுபவத்தை அடைவதில்லை.

311. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

பொருள் : சிவத்தின் அருளைப் பெற்றவர்கள் உண்மைநெறி ஒன்று என்று எண்ணி அந்நெறியே வாழ்கின்றார்கள். சிவத்தின் அருளைப் பெறாதவர்கள் உலகில் பலநெறி உள என்று கூறுவர். ஆனால் எங்களது இறைவனே எல்லா நெறியாயும் உள்ளான். கல்லாதவர்கள் இவ்வாறு கலந்திருக்கும் இயல்பை அறிய மாட்டார்கள்.

312. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

பொருள் : நிலையில்லாதவற்றை நிலையுடையனவாகவும் நிலையில்லாத உடம்பை நிலையுடையதாகவும் நெஞ்சில் எண்ணுபவர்களே ! எல்லா உயிர்கட்கும் இறைவனே தாரகமாயினும் உண்மை உணராதார் நெஞ்சில் அறியப் படாதவனாகவே உள்ளான்.

313. கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

பொருள் : இறைவழி நிற்கும் ஆற்றல் இல்லேன். அதனால் வினைத் துயரங்களுக்கு ஆளானேன். சிவத்துடன் பொருந்தி நிற்கும் சிவநெறியைக் கற்கவில்லை. அறியாமையால் மயக்கம் செய்வனவற்றைப் பயில்பவனாக உள்ளேன். வழங்கும் வள்ளலாகிய பெருமானை மனத்தினுள் தியானிக்க வல்லேன் அல்லேன். புறம்பே நின்று உலகானுபவத்தில் திளைப்பவனாக நான் உள்ளேன்.

314. நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

பொருள் : சீவன் எடுத்த உடம்பில் நினைத்திராது பிரிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து, சிவத்தின் அருளைப் பெற்றவர் தான தருமம் செய்தும் துறவறம் பூண்டும் ஒழுகினார். உலகில் அருளைப் பெறாதவராகிய கீழ்மக்கள் கொடிய வினையால் வினையும் துயரத்தை அனுபவிப்பர்.

315. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ள கலந்துஅங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்று
எண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

பொருள் : பரம ஆகாயத்தினுள் விளைந்த சிவமாகிய விளங்கனி கண்ணினுள்ளே கலந்து அவ்விடத்து இருந்தது. உலகியலைப் பெரிதாக மதித்து அதில் வாழ்ந்து கொண்டு, புத்தியூகத்தால் பலவாறாக இறை நிலையை எழுதி வீணாயினரே !

316. கணக்கறிந் தார்க்குஅன்றிக் காணஒண் ணாது
கணக்கறிந் தார்க்குஅன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொருள் : ஞான சாதனையை அறிந்தவர்க்கு அன்றிச் சிவமாகிய விளங்கனியைப் பெற முடியாது இச் சாதனையை அறிந்தவர்க்கு அன்றிக் காட்சி கைகூடாது. ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளைக் கண்டு பொருந்தி நிற்கும் வித்தையை அறிந்தவர் உண்மையான கல்வி கற்றவராவர்.

317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லாராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

பொருள் : கற்று அனுபவம் இல்லாத மூடரைக் காணவும் கூடாது. அவரது வார்த்தையைக் கேட்பதும் கடமை ஆகாது. அனுபவம் இல்லாத மூடரைக் காட்டிலும் எழுத்து வாசனையில்லாதவர் நல்லவராம். அனுபவம் இல்லாதவர் கருத்தில் இறைவனை உணர மாட்டார்.

318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

பொருள் : நூல்களைக் கற்றும் அன்பவ ஞானம் இல்லாத தீய குணமுடையோர் தீமையைத் தருவதாகிய ஆணவம் கன்மம் மயை யாகிய சுற்றத்தை விடமாட்டார். இவர்கள் குற்றத்தை அறிந்து நீக்கிக் கொள்ளாத மூடர்களாவர். மேலும் பல திசைகளிலுள்ள அறிஞர்களோடு கூடி உண்மை உணரா அறிவிலிகள் ஆவார்கள். ஆனால் சிவஞானம் பெற்றுச் சிவத்தினிடம் அன்பு கொண்டு நிற்போரே கணக்கறிந்தவராவர்.

319. ஆதிப் பிரான்அ மரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பம் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வுஅறி யாரே.

பொருள் : யாவர்க்கும் தலைவனாகிய முதல்வன் தேவர்க்கும் மங்காத ஒளியாய்த் திகழ்கின்றான். ஒளி பெற்ற அடியார் நாடும் பெரிய கடவுளாய் இருக்கின்றான். அப்பெருமானைக் கற்றறிந்துவிடுவோம் என்று கூறுவார். அவர்கள் உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வாறு நடத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அறியார்கள்.

23. நடுவு நிலைமை

(நடுவு நிலைமை என்பதற்கு, சிரசின் மேல் விளங்கும் ஒளியில் நிற்றல், நடுவாகிய சுழுமுனையில் நிற்றல், சிவசத்திக்கு இடையே நிற்றல், சூரிய சந்திரனாகிய இரு கண்களுக்கு மேல், புருவ நடுவில் நிற்றல், எல்லா உயிர்களிடமும் அந்தண்மை பூண்டு ஒழுகல் எனப் பல பொருளும் பொருந்தும்)

320. நடுவுநின் றார்க்குஅன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

பொருள் : நடுவாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அறிந்து நில்லாதவர்க்கு ஞானம் கிட்டாது நடுவாகிய சகஸ்ர தள ஒளியில் நிற்போர்க்கு நரகம் கிடையாது. அவ்வாறு நடுவுநின்றார் நல்ல தேவ வடிவு பெறுவர். சம்பிரதாய முறையில் நடுவு நின்ற அடியார் வழியால் நானும் பயின்று நின்றேன்.

321. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றான்நல்ல நம்பனும் ஆமே.

பொருள் : சகஸ்ர தள ஒளியில் நல்ல மேக வண்ணத்தனாகிய திருமால் நின்றான். அதில் நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமன் இருந்தான். அதிலே சில ஞானிகள் ஆவோரும் இருந்தனர். அதில் யாவரும் நம்பத்தக்க சிவனும் விளங்கி நின்றான்.

322. நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுநின் றார்சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின் றார்ஒரு நானும்நின் றேனே.

பொருள் : இப் பிறவியிலேயே ஞானிகளாக வேண்டிய சிலரும் சிரசின் மேல் உச்சியில் பொருந்தியிருந்தனர். அவ்வாறு சகஸ்ரதளத்தில் பொருந்தி யிருந்தவரில் சிலர் தேவர்கள் ஆவார்கள். அவருள் வேறு சிலர் சிவமாந் தன்மை எய்துவர். அவ்வழியிலே நானும் சகஸ்ரதள ஒளியில் நிலை பெற்றுள்ள அடியார் கூட்டத்தோடு கலந்து நின்றேன்.

323. தோன்றிய எல்லாம் துடைப்பனை அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

பொருள் : உலகில் தோன்றி எல்லாவற்றையும் அழிக்க வல்லவன் இறைவனாகிய சிவபெருமான். சகஸ்ரதள ஒளியில் நிற்பவரே எப்போதும் நன்றிக் கடப்பாடு உடையவராக விளங்கினார். அவர் இறைவனது இரு திருவடிகளையும் பெற வேண்டும் என்று முயன்றிருந்தார். மேலும் அவர்கள் முதல்வனது திருநாமத்தைப் பற்றிக் கொண்டு போக நித்திரையில் இருந்தார்கள் (முயன்று என்பது மூன்று எனத் திரிந்தது).

24. கள்ளுண்ணாமை (கள் உண்ணாதிருத்தல்)

324. கழுநீர் பசுப்பெறின் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே

பொருள் : பசுக்கள் அருந்துவதற்குக் கழுநீர்ப் பெற்றால் பிறகுளந்தோறும் சென்று நீரைத் தேடி அருந்தா. கழுநீரை விரும்பித் தாகத்தால் களைத்துத் தம்முடைய உடம்பினை சிவானந்தமாகிய மதுவாகும். இம்மதுவை அருந்தாமல் முழுநீர் மயமான மதுவை உண்பர் ஒழுக்கத்தின் நீங்கியவர். என்னே அறியாமை !

325. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்துச் சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே.

பொருள் : சித்தத்தைச் சிவன்பால் வைத்து உருகச் செய்து, சிவ சமாதியில் பொருந்தி, சிவானந்தம் நீங்காத மதுவினை, சுத்தநிலையில் அனுபவிக்கச் சிவானந்தம் நீங்காது, அதை விட்டுச் சிவன் நினைவின்றி நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் கீழ்நிலையாகும். நிற்றல் நித்தலெனத் திரிந்தது.

326. காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள்ள மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தம் தேறல் உணர்வுண்டே

பொருள் : காமமும் கள்ளும் கீழ்மக்களுக்கே யாகும். ஆணவ மலமும் சமயத்தை உள்ளவாறு உணராது மயக்கத்தை விளைக்கும். கெட்டுப் போகும் புத்தி உண்டாகும். மேலோர்க்குச் சிவபெருமானது இரு திருவடி இணைப்பால் பெறும் பிரணவ மயமான சிவானந்தத் தேனாகிய உணர்வு உள்ளது.

327. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள்ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக்கு உள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

பொருள் : சத்தி வழிபாட்டினர் தேவிக்குத் திருப்தி செய்வதாய்க் கூறித் தாங்கள் மதுவுண்டு அழிபவராவர். காம வாழ்வில் உள்ளோர் காமமாகிய போதையிலிருந்தே கலங்கி நிற்பர். மகாதேவா என்னும் ஓமத்தைச் செய்வோர் சிரசின் மேல் வெளிப்படும் ஒளிக்குள்ளே தமது உணர்வை நிறுத்தி மகிழ்ந்திருப்பர். சிவநாம மகிமையை அறிந்து அனுபவிப்பவர் அப்பொழுதே சிவனை அணுகும் இன்பம் பெறுவர். நாமத்தோர் - நாம சங்கீர்த்தனம் செய்வோர்.

328. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளண்மை நாதன் அருளினான் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

பொருள் : வேதாகமம் உணர்த்தும் உண்மையை விளங்க மாட்டாதார் பசு பாசம் பதி ஆகியவற்றை அறிய மாட்டார். அவர் விரும்பியவற்றை யெல்லாம் அளிக்கும் சிவபெருமானது அருளைத் துணையாகக் கொண்டு வாழமாட்டார். தெளிந்த உண்மையான சிவபோகத்தில் அவர் நிலைபெற மாட்டார். புறத்தேயுள்ள நீர்க் கள்ளை அருந்துவோர் உண்மையை உணர மாட்டார்.

329. மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொருள் : மயங்கச் செய்கின்ற சமயக் குற்றங்களைப் பொருந்திய மூடர்கள் சமயத்தின் பேரால் மயக்கத்தைத் தருகின்ற மதுவினை அருந்துவார்கள். இப்பெரிய மூடர்கள் நல்ல வழியை ஆராய்ந்து அறியார்கள். மயக்கத்தைக் கொடுக்கின்ற மகா மாயையும் மாயையின் இருப்பிடமாகும். மயக்கத்தினின்றும் தெளிந்தாலும் வாமாசார வழிபாடு மீண்டும் மயக்கத்தைத் தருமே தவிர சிவானந்தத்தை நல்காது.

330. மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொருள் : உண்டாரை மயங்கச் செய்வதும் மாண்டாரை நினைந்து கவலச் செய்வதும் ஆகிய கள் உண்மையை அழிக்கும். இயங்கிக் கொண்டிருக்கிற பெண் இன்பத்தை நாடி அடையத் தூண்டும் இங்ஙனமாகிய கள்ளை உண்பார் நல்ல ஞானத்துத் தலைப்பட்டார். அவர்களுக்கு என்று இடையறாது விளங்கும் சிவானந்தத் தேறல் கிட்டுமோ ? கிட்டாது (ஏகாரம் எதிர்மறைப் பொருளானது)

331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

பொருள் : இரவு பகல் என்று பேதமற்று தன்னை மறந்த சாக்கிர அதீத நிலையில் இருந்து, வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனை உலகவர் அருந்தமாட்டார். இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து, இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.

332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

பொருள் : சத்தியை அடைய விரும்பிச் சாகத் மதத்தின் (வாமத்தோர்) மதுவை உண்பர். மதுவுண்டு தம்மை மறந்திருத்தலால் அவரது அறிவுச் சத்தி கெடுகிறது. சத்தி என்பது சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று, சத்திய ஞான ஆனந்தத்தை அடைதலாம்.

333. சத்தன் அருள்தரின் சத்தி அருள்உண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருள்உண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும்தன் உள்வைக்கச்
சத்தியும் எண்சித்தித் தன்மையும் ஆமே.

பொருள் : சத்தியை உடையவனாகிச் சிவன் அருள் புரில்தால் சத்தியின் அருள்கிட்டும். சத்தி அருள் புரிநதால் சிவனது அருள் உண்டாகும். சத்தி சிவமாகிய இரண்டும் விளங்கும் விந்து நாதங்களை உணர்ந்து பொருந்தியிருக்க, அவர்களுக்குச் சத்தி வடிவம் உண்டாகி அட்டமா சித்திகளும் தாமே வந்தடையும்.

334. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

பொருள் : சிவானந்தமாகிய தேன் முப்பத்தூறு தத்துவங்களையும் கடக்கச் செய்து, தத்துவங்களே தான் என்று மயங்கின அறிவை நீக்கிச் சிவமாய், உபாயத்தால் அடையலாம் என்று எண்ணிச் செய்யப்பெறும் பொய்த் தவங்களினின்றும் நீக்கியருளி, உண்மையான சிவபோகத்துள் செலுத்தி, உண்மையாய்த் தோன்றிய உலகம் இல்லாதது ஒழியும்படி செய்து மேலான ஆனந்தம் சிந்திக்கும்படி செய்யும்.

335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழித் தாரே.

பொருள் : சிவயோகியர் பிராணனை வசப்படுத்தி, சந்திர மண்டலத்தில் சிவானந்தத்தை அருந்துபவர். அட்டமா சித்திகளை விரும்புபவர் கள்ளினைக் குடித்து மூடராக ஆசைப்பட்டு, உண்டாகும் பற்றினால் உள்ள அறிவையும் இழந்தார்கள்.

336. உண்ணீர் அமுத முறும்ஊ றலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.

பொருள் : மரணத்தை மாற்றும் ஒளி ஊற்றைத் திறந்து அனுபவிக்க மாட்டீர். சிவகுருவின் திருவடியை எண்ணி நிற்க மாட்டீர். சமாதியில் சிவ சோதியை விரும்பிப் பொருத்த மாட்டீர். அருள் நீர்ப் பெருக்கால் நன்மை தரும் கண்ணின் காரியமாகிய ஒளி நெறி பற்றிச் சென்று, பிராணன் செல்லும் வழியை (சுழுமுனை வழியை) அறியுங்கள்.

முதல் தந்திரம் முற்றிற்று.

 
மேலும் பத்தாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் ... மேலும்
 
temple news
(காமிக ஆகமம்) 1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் ... மேலும்
 
temple news
1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்) (அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், ... மேலும்
 
temple news
(சித்த ஆகமம்) 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே ... மேலும்
 
temple news
(வாதுளாகமம்) 1. சுத்த சைவம் (இயற்கைச் செந்நெறி) (சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar