பதிவு செய்த நாள்
29
ஆக
2016
10:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன் 62 அடி உயர தங்கக்கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். காலாஸ் பட்டர் யாகசாலை பூஜைகளை நடத்தினார். சந்திரன், சூரியன், காளை வாகன சின்னம் பொறிக்கப்பட்ட வெண்மை நிற கொடிக்கு பூஜைகள், கொடிமரத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. காலை 8:50 மணிக்கு வேத மந்திரம் முழங்க, மங்கள நாதஸ்வர மேளம், சங்குகள் ஒலிக்க ஆவணி மூல திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மலர்கள் துாவி, சர்வ தீபாராதனைகள் காண்பிக்கப் பட்டன.
சுவாமி பட்டாபிஷேகம்: செப்., 2 வரை காலை, இரவு சந்திரசேகர் உற்சவம் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு. செப்.,3 கருங்குருவிக்கு உபதேசம். செப்.,4 நாரைக்கு மோட்சம் அருளிய லீலை. செப்.,5 மாணிக்கம் விற்ற லீலை. செப்.,6 தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை. செப்.,7 உலவாக்கோட்டை. செப்.,8 பாணனுக்கு அங்கம் வெட்டியது. இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தவித வரலாற்று லீலை. செப்.,9 காலை வளையல் விற்ற லீலை. இரவு 7:05 மணிக்கு மேல் 7:29 மணிக்குள் சுவாமி பட்டாபிஷேகம்.
செப்.,10 நரியை பரியாக்கிய லீலை (குதிரை கயிறு மாறிய லீலை). செப்.,11ல் மதியம் 2:35 மணிக்கு மேல் மதியம் 2:59 மணிக்குள் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை. செப்.,12 விறகு விற்ற லீலை. செப்.,13 சட்டத்தேர் (காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள்). இரவு சப்தாவரணம். செப்.,14 தீர்த்தம் உற்சவம் (இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் விடைபெறுதல்).
பிட்டு உற்சவத்தன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு பிட்டு உற்சவம் நடைபெற்று, இரவு கோயில் சேத்தியாகும் வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.