சபரிமலை: சபரிமலையில் அவசர கால உதவிக்காக நிலக்கல்லில் ஹெலிபேடு அமைக்கும் பணி தொடங்கியது. ஒரு மாத காலத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல மகரவிளக்கு காலத்தில் விபத்து் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை ஐந்து கிலோ மீட்டர் தோளில் சுமந்து பம்பைக்கு கொண்டு வர வேண்டும். அதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை, கோட்டயம் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்வர்.இதை தவிர்க்க சபரிமலையில் ஹெலிபேடு அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை, இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போது நிலக்கல்லில் தேவசம்போர்டுக்கு சொந்தமான இடத்தில் 60 மீ., நீளம், 30 மீ., அகலத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் சபரிமலையில் அவரச உதவிக்கும், நோய்வாய் பட்டவர்கள் மற்றும் விபத்துகளில் சிக்குபவர்களை விரைவாக கொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.
கருணாகரன் கேரள முதல்வராக இருந்த போது, அப்போதைய பிரதமர் இந்திராவை சபரிமலை அழைத்து வர முயற்சி செய்தார். இதற்காக சரங்குத்தியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பால் இந்திரா பயண திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அந்த ஹெலிபேடு பழுதடைந்து காணப்படுகிறது.