பதிவு செய்த நாள்
08
அக்
2016
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில், மேலும், ஐந்து இடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. 13 நிலையுடைய, 217 அடி உயர ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்படுகிறது. இந்நிலையில், ராஜகோபுரத்தில், நான்காவது துாணின் மேற்கூரை பீமில், நான்கு அடிக்கு விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய, சென்னை, ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக உதவி பேராசிரியர் அருண்மேனன், ஜூலை, 27ல் ஆய்வு செய்தார். பின், கோபுரத்தின், 13 நிலைகளில் சேதமடைந்திருந்த, தேக்கு மர படி மாற்றி புதுப்பிக்கப்பட்டது. கோபுர விரிசலை சரி செய்யும் பணியில், ஐந்து பேர் அடங்கிய நிபுணர் குழுவினர், நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தின் அருகே, இரண்டு இடங்களிலும், எதிர்புறத்தில் மூன்று இடங்களிலும் அரை அடி முதல், ஒரு அடி வரை சிறிய அளவிலான விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் சீரமைக்கும் பணியில் நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.