பதிவு செய்த நாள்
08
அக்
2016
11:10
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இலவசம் மற்றும் கட்டண தரிசன முறையை பயன்படுத்துவோர், முருகன் உட்பட 5 கடவுள்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கை முடித்து வைத்தது.
விஸ்வநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எழுதிய கடிதம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடவறை பகுதியில் முருகன், விநாயகர், துர்க்கையம்மன் சுவாமி சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. குடவறையின் இடது, வலது புற பகுதியில் சிவன், திருமால் சுவாமி சிலைகள் உள்ளன. இலவச தரிசனத்தில் செல்வோர் முருகன், விநாயகர், துர்க்கையம்மனை தரிசிக்க முடியும். சிவன், திருமாலை பார்க்க, தரிசிக்க முடியாது. சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோர் முருகன் உட்பட 5 கடவுள்களை வழிபடலாம். இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.
சிறப்பு தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.அனைத்து பக்தர்களும் இடையூறின்றி வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அனைவரும் தரிசிக்கும் வகையில் வழித்தடம் ஏற்படுத்த மதுரை கலெக்டர் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. கலெக்டர் வீரராகவ ராவ், இலவசம் மற்றும் கட்டண தரிசன முறையை பயன்படுத்துவோர் கம்பத்தடி மண்டபத்தில் ஒன்று சேர்ந்து, கர்ப்பகிரகம் செல்லும் வழியில் 5 கடவுள்களையும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நடைமுறை இன்று (நேற்று) முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது, என அறிக்கை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், இதில் மேலும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை, எனக்கூறி வழக்கை முடித்து வைத்து கலெக்டர், கோயில் செயல் அலுவலரை பாராட்டுகிறோம் என்றனர்.