நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளாவை சேர்ந்த பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால், இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் பூஜிக்கப்பட்ட திருக்கொடியை பூஜாரிகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடிமரத்தில் மேல்சாந்தி சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது. மார்ச்3ம் தேதி இரவு பெரியபடுக்கை பூஜையும், ஆறாம் தேதி இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. ஏழாம் தேதி ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்று விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி பத்து நாட்களும் நடக்கும் இந்து சமய மாநாட்டை பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். விழா பாதுகாப்பு பணியில் சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.