விநாயகனை கணேசபஞ்சரத்னம், விநாயக அஷ்டகம், விநாயகர்அகவல் மூலமாக வழிபடலாம். சிறந்த பலனை தரும். அதாவது கணேசரின் பீஜ மந்திரம் கம். (கம் கம் என த்யானித்தால் வாழ்க்கை ஜம்ஜம் மென இருக்கும்.) கம் கணபதயே நமஹ இந்த மஹா மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் கணேசனின் கடாக்ஷத்தை பெறலாம். அதேபோல் கீழ்க்காணும் விநாயக மந்திரங்களும் மிக மகிமையானவை. கஜானனாயை நமஹ - யானை தலையை கொண்டவனே போற்றி. யானைக்கு ஞாபக சக்தி, சூட்சும அறிவு அதிகம். நமக்கு ஞானம் கிட்டவும், நமது தேவைகளை ஞாபகத்தில் வைத்து நம்மை காக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பலனை பெறலாம். சூர்ப்ப கர்ணாயை நமஹ- முறம் போன்ற காதுகளை கொண்டவனுக்கு போற்றி. இந்த மந்திரம் அந்த பெரிய காதுகளுக்கு நமது சின்ன குறைகளை கொண்டு சேர்க்கும். அதன் மூலம் நமது இன்னல்கள் விலகும்.
தீர்க்க துண்டாய நம - நீண்ட துதிக்கையை உடையவனே போற்றி. அகவல் பாடிய ஔவைபிராட்டியை சிவலோகத்திற்கு சேர்த்த புண்ணியம் இத்தும்பிக்கைக்கே உரியது. ஔவையை சேர்த்ததைப் போல நம்மையும் கரையேற்றும் இம் மந்திரம். லம்போதராய நமஹ- பேழை வயிற்றோனே போற்றி. விநாயகனின் வயிறே பேரண்ட ஸ்வரூபம். இந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதனால் அண்டத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் நம் வசமாக்க முடியும். அனைத்து கடவுளர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மோதக ஹஸ்தாயை நமஹ- கொழுக்கட்டையை கையில் கொண்டவனே போற்றி. மோதகம் என்பது ஞானத்தின் குறியீடு, வெண்மை அறிவையும், அமைதியையும், உள்ளிருக்கும் பூரணம் பூரணத்துவத்தையும் குறிக்கிறது. குறிப்பாக கல்வி, ஞானம் வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய மந்திரம் இது.