பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு நேற்று வளைகாப்பு நடந்தது. இதையொட்டி, சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து, பராசக்தி அம்மன், வளைகாப்பு மண்டபத்தில் எழுந்திருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் சாற்றி வழிபட்டனர். இரவில், காமதேனு வாகனத்தில், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் வீதியுலா வந்தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு, உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் நடந்த தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.