சபரிமலை, ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(ஆக.,16) மாலை திறக்கிறது. புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்பார். இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் கிடையாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கும். நாளை அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும்.
தொடர்ந்து கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை போன்ற வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலசம், அஷ்டாபிஷேகம் போன்றவை நடைபெறும். 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் இந்த பூஜைகளுடன் இரவு ஏழு மணிக்கு படிபூஜையும் நடைபெறும். 21 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் பூஜைகள் அனைத்தும் தாழமண் தந்திரிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களின் மேற்பார்வையில் நடைபெறும். தற்போது கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் உள்ளனர். சுழற்சி முறையில் மலையாள ஆண்டு ஆவணி ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு ஒருவர் பொறுப்புகளை கவனிப்பார். இந்த ஆவணி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு இன்று பொறுப்பேற்கிறார்.