மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணியளவில், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு இளநீர், தேன், நெய் உள்ளிட்ட ஏழுவித அபிஷேகங்கள் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லாக்கில் பக்தர்கள் துாக்கி வந்தனர். பின் கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து உற்சவ நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றிவந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செய்து வைத்தனர்.