பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
03:07
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மை செய்வார்கள். ராகு செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். தற்போது குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக உள்ளதால் பிரச்னையை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பொருளாதார வளம் பெருகும் மாதமாக இது அமையும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். ஆக.2 க்கு பிறகு பெரியோர் களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். ஆக.6,7ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக. 1,2 ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஜூலை30, 31 ஆகிய நாட்கள் நல்ல நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். சேமிப்பு பணத்தை நிரந்தர சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வது நல்லது.
நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பங்குதாரர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். ஆக. 2 க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். ஆக. 8,9ல் சந்திரனால் தடை, பண விரயம் ஏற்படலாம். அதே நேரம் ஜூலை 20,21, ஆக.16 ல் எதிர்பாராத வருமானம் வந்து சேரும். புதன் உங்கள் ராசிக்கு 3-ல் இருப்பதால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தடையேதும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். செவ்வாயால் அவ்வப்போது முயற்சிகளில் தடைகள் குறுக்கிட வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு பழ வகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் தற்போது இல்லை.
மாணவர்களுக்கு சுமாரான நிலையே தொடர்கிறது. புதன் சாதகமாக இல்லாததால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குருவின் பார்வையால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிலர் அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆக. 2 க்கு பிறகு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை அணிகலன் கள் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஜூலை 22,23,24 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். ஆக. 2க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த கடனுதவி வங்கி மூலம் பெறுவர்.
* நல்ல நாள்: ஜூலை 20,21,22,23,24,30,31, ஆக. 1,2,6,7,10,11,16
* கவன நாள்: ஜூலை 25,26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம்
● சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்
● செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை வழிபாடு