பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
தஞ்சாவூர்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள், நேற்று, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், பல நூற்றாண்டு பெருமை கொண்டது. இங்குள்ள, பழைய சோமாஸ்கந்தர் உற்ஸவர் சிலை சிதிலம் அடைந்ததாகக் கூறி, புதிய சிலை செய்ய, அறநிலையத் துறை முடிவு செய்தது.
பழைய உற்சவர் சிலை, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில், 75 சதவீதம் தங்கம் உள்ளது; பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என, காலம் காலமாக கூறப்பட்டு வந்தது. 2016ம் ஆண்டு செய்யப்பட்ட, புதிய சோமாஸ்கந்தர் மற்றும் ஏழுவார்குழலி அம்பாள் சிலைகளில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிசோதித்தனர். இதில், சிலைகளில் தங்கமே இல்லை என்ற திடுக்கிடும் தகவல் தெரிந்தது. சிலைகள் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஏகாம்பரநாதர் கோவில் இணை ஆணையர் கவிதா உட்பட, ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து, சோமாஸ்கந்தர் மற்றும் ஏழுவார்குழலி சிலைகளை, கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து வந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்னிலையில் அளவீடு செய்த போது, சோமாஸ்கந்தரின் சிலை, 2 அடி உயரமும், 110 கிலோ எடையும், ஏழுவார்குழலி, 3 அடி உயரமும், 60 அடி உயரமும் இருந்தது. இரு சிலைகளையும், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.