பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
முருகன் கோவில்களில், தை கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், தை கிருத்திகையை முன்னிட்டு, மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதை தொடர்ந்து தங்க வேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மேலும், காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இதேபோல், வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.