Special supplement · Part 3 · page 59 · 119 / 159
மதுரை கோயிலும் வைத்தியநாத ஐயரும்
தமிழகத்தின் ஆன்மிகம், பண்பாடு, வரலாற்றுடன் தொடர்புள்ள தலம் மதுரை. இங்கு வரலாற்றில் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தையும் பதிவு செய்த முக்கிய நிகழ்வு 1939 ல் நடைபெற்றது. அந்த வரலாற்றுச் சம்பவத்துடன் நெருக்கமாக இணைந்தவர் அ.வைத்தியநாத ஐயர். அந்தக் காலகட்டத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஹிந்துக்கள் கோயில் வழிபாடு செய்ய தடைகள் இருந்தன. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்ட வைத்தியநாத ஐயர், கோயில் நுழைவு உரிமைக்காக பிரச்சாரம் செய்தார். அவர் தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங்கத்தின் பணிகளிலும் முக்கிய பங்கு வகித்தார். 1939 ஜூன் 13ல் மதுரையில் கோயில் நுழைவு மாநாடு நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோயிலில் அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன் உள்ளிட்ட பலர் இதற்காகப் பாடுபட்டனர். கோயில் நிர்வாகத்திலும் சீர்திருத்தத்திற்கு ஆதரவு இருந்தது. இதன் உச்சகட்டமாக 1939 ஜூலை 8ல் வைத்தியநாத ஐயர் தலைமையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கொண்ட குழு மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தது. பி. கக்கன் உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இருந்தனர். கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.நாயுடு அவர்களை வரவேற்று வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வு ஜாதி வேறுபாட்டுக்கு எதிரான அகிம்சை வழியிலான முக்கிய சமூகச் சீர்திருத்த நடவடிக்கையாகும். எதிர்ப்பு இருந்த போதிலும், நிகழ்வு அமைதியாக நடைபெற்றது. பின்னர் கோயில் நுழைவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன; 1939ல் மதராஸ் மாகாணத்தில் கோயில் நுழைவு தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இங்கு வைத்தியநாத ஐயரின் பங்களிப்பை வெறும் ‘ஒரு கோயிலுக்குள் சிலரை அழைத்துச் சென்றது’ என்று மட்டும் பார்க்க முடியாது. ‘கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம்’ என்ற சமூகநீதிக் கருத்தை நடைமுறையில் வெளிப்படுத்திய வரலாற்று முயற்சியாக இதைப் பார்க்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் அந்தச் சமூக மாற்றத்தின் முக்கியமான அடையாளமாக மாறியது. எனவே மீனாட்சி அம்மன் கோயிலும், வைத்தியநாத ஐயரும் கொண்டுள்ள தொடர்பு ஆன்மிகத் தொடர்பு மட்டுமல்ல; அது சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மனித உரிமை ஆகியவற்றின் வரலாற்றுத் தொடர்பாகும். 1939 ஜூலை 8 மதுரையின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழகத்தின் சமூகச் சீர்திருத்த வரலாற்றிலும் முக்கியமான நாளாகத் திகழ்கிறது.
— சே.மணி ஐயர், பெரியகுளம், தேனி,