பதிவு செய்த நாள்
16
டிச
2019
10:12
வேலுார்: குழந்தை வரம் வேண்டி, வேலுார் அருகே, மார்க்கபந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ஏராளமான பெண்கள், நடுங்கும் குளிரில், நீராடி வழிபட்டனர்.
வேலுார் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள, மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில், கடை ஞாயிறு விழா நடக்கும். அப்போது, கோவிலில் உள்ள சூலி தீர்த்தம், சோம தீர்த்தத்தில் நீராடினால் பேய், பிசாசு, பில்லி சூனியம், வலிப்பு, தீவினை விலகும் என்ற ஐதீகம் உள்ளது. குழந்தை இல்லாத பெண்கள், சிம்ம குளத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு நீராடி, கோவிலில் படுத்து உறங்கினால், அவர்கள் கனவில், இறைவன் ஒளியாக தோன்றி, குழந்தை வரம் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டின் கடைசி ஞாயிறு விழா, நேற்று நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சிம்ம குளத்தை திறந்து வைத்தனர். ஏராளமான பெண்கள் சிம்ம குளத்தில் உள்ள, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, கோவிலில் படுத்து உறங்கினர். மேலும், பில்லி சூனியம் விலக, ஆண்களும், பெண்களும், சூலி தீர்த்தம், சோம தீர்த்தத்தில் நீராடினர். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். திருப்பத்துார், குடியாத்தம், காட்பாடி, வேலுாரில் இருந்து, அரசு சார்பில், 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நேற்று காலை, 6:30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, அணைக்கட்டு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.