பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
புதுச்சேரி:கொம்பாக்கத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நேற்று நடந்தது. முதலியார்பேட்டை அடுத்த கொம்பாக்கத்தில் அலர்மேல்மங்கா சமேத வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு, செங்கழுநீரம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வேங்கடாசலபதி கோவிலுக்கு வந்தனர். அங்கு, ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.பின், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வடை மாலை சார்த்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் உற்சவர் வீதியுலா, மாலையில் 108 தீப திருவிழா நடந்தது.ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் புருஷோத்தமன், செயலாளர் கிருஷ்ணராஜன், பொருளாளர் முருகையன், உறுப்பினர் வரதராஜீ மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.