பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
நாகர்கோவில், மண்டல காலத்தில், 39 நாள் வருமானமாக, 156.60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
மண்டல காலம் நிறைவையொட்டி, சன்னிதானத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மண்டல காலம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி மூன்று நாட்களை தவிர்த்தால், சுமூகமாக இருந்தது. டிச., 23, 24, 25 தேதிகளில் எதிர்பார்த்ததை விட, பல மடங்கு பக்தர்கள் வந்தனர். ஒரு குறிப்பிட்ட அளவு தான், பக்தர்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முடியும் என்பதால், வழிகளில் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால், பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது உண்மை. இது போன்ற சூழ்நிலை, இனி ஏற்பட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடை அடைக்கும் நாட்களில், 15 லட்சம் டின், அரவணை தயாரித்து, ஸ்டாக் செய்யப்படும். கடந்த, 39 நாட்களில் வருமானம், 156.60 கோடி ரூபாய். இது, கடந்த ஆண்டை விட, 51 கோடி ரூபாய் அதிகம். அரவணை விற்பனையில், 67.76 கோடி ரூபாய், காணிக்யைாக, 53.14 கோடி ரூபாய், அப்பம் விற்பனையில், 9.86 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.