பதிவு செய்த நாள்
14
ஜன
2020
11:01
பழையசீவரம்: பார்வேட்டை உற்சவத்தையொட்டி, பழையசீவரம் கிராமத்திற்கு, 16ம் தேதி, வரதராஜ பெருமாள் எழுந்தருள்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, பார்வேட்டை உற்சவத்தில், பழையசீவரம் மலைக்கு செல்வார். இதற்காக, நாளை இரவு, 9:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.டோல்கேட், திம்மராஜம்பேட்டை, சங்கராபுரம், பழையசீவரம் ஊர்களில் பெருமாள் வீதியுலா சென்று, 16ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, பழையசீவரம் மலைமேல், பெருமாள் எழுந்தருள்வார். அங்கு, திருமஞ்சனம் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு பின், மாலை, 5:00 மணிக்கு, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்வார்.அங்கு, சாலவாக்கம், திருமுக்கூடல், பழையசீவரம், காவாந்தண்டலம், காஞ்சி வரதர் உள்ளிட்ட பெருமாள்கள், ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.தொடர்ந்து, வரதராஜ பெருமாள், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம் கிராமங்களின் வழியாக, 17ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, காஞ்சிபுரத்தை அடைகிறார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பார்வேட்டை உற்சவம், காணும் பொங்கலான, 17ம் தேதி நடைபெறுகிறது.அன்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. பல்வேறு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், திம்மசமுத்திரம் திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்கிறார்.அங்கு, சுவாமிக்கு, பல வகையான அபிஷேகம் நடைபெறும். இந்த பார்வேட்டை உற்சவத்தை காண, சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வருவர்.அன்று இரவு, 10:00 மணிக்கு, வாண வேடிக்கை முடிந்து, அங்கிருந்து கிளம்பும் ஏகாம்பரநாதர், மீண்டும் காஞ்சிபுரம் வந்தடைகிறார்.