பகவான் கண்ணன் அவதரித்த ஊர் மதுரா, அங்கிருந்து தென்கிழக்கில் ஐந்து கி.மீ. தொலைவில் ஓடுகிறது யமுனா நதி. அதன்மீது கட்டப்பட்ட பாலத்தைக் கடந்துசென்றால் கண்ணன் வாழ்ந்த கோகுலத்துக்குச் செல்லலாம். கோகுலம், சிறிய ஊர்தான். அங்கிரு க்கும் கோயிலில்தான் நவமோகன கிருஷ்ணன்’ என்ற பெயரில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் கண்ணபிரான் காட்சி தருகிறார்.
பகவான் கண்ணனுடன் பாமா ருக்மிணியும் காட்சி தருகிறார்கள். பக்தர்கள் இக்கோயிலில் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணலாம்.
மகாகவி சூர்தாஸ், வல்லபாசார்யரின் மாணவர். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர். அவர் கோகுலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனின் பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அங்கே செல்ல வேண்டுமென்று விரும்பினார். கண்ணனை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் கண்ணனாவது தன்னைப் பார்ப்பானே என்ற முழு நம்பிக்கையில் தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களை வற்புறுத்தினார். அவர்களும் அவரை அந்தக் கோயிலுக்குள் அழைத்துச்சென்று பகவான் கிருஷ்ணனின் விக்ரகத்தின் முன் நிறுத்தினார்கள். கிருஷ்ணன் முன் நின்ற சூர்தாஸ் கவிபாட ஆரம்பித்தார். தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். கிருஷ்ணனின் அரு ளால் அவரது பார்வைக் குறை நீங்கியது. தெய்விக ஒளி அவருக்குப் பார்வையைத் தந் தது என்பது வரலாறு.
இத்திருத்தலமான ஆயர்பாடியில் இன்னொரு கண்ணன் கோயிலும் உண்டு. அதை புராண கோகுல் என்பர். இதன் வாசலை ஒட்டியும் யமுனை நதி ஓடுகிறது. இதன் கரையில் நந்தகோபர், யசோதை, பலராமர் ஆகியோருக்கு மரத்தால் செய்யப்பட்ட உருவச் சிலைகள் உள்ளன. சிறிய மரத்தொட்டிலில் மரத்தில் செதுக்கப்பட்ட சிலையாக சின்னக் கண்ணன் அழகாகக் காட்சி தருகிறான். மதுரா, ராமாயணக் காலத்தில் உருவான ஊர் என்று புராணம் சொல்லும். இந்த ஊரை நகராக உருவாக்கி ’மதுரா’ என்று பெயர் சூட்டியவர் சத்ருக்னன் என்பர். இந்தத் தலத்தை, திருமங்கை யாழ்வார் ஏழு பாசுரங்களிலும், பெரியாழ்வார் பத்து பாசுரங்களிலும், ஆண்டாள் ஐந்து பாசுரங்களிலும் பாடியுள்ளார்கள். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெயும் அவலும் இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பானது.