சிவன் கோயில்களில் அவரது மனைவியாக இருக்கும் பார்வதி நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலில் கன்னியாக இருக்கிறாள். நீலாயதாட்சி என்னும் பெயர் கொண்ட இவளை நவராத்திரியில் வழிபடுவது சிறப்பு. யமுனை நதிக்கரையிலுள்ள வேத புரத்தில் கருத்தம முனிவர் வசித்தார். சிவனருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘புண்டரீகன்’ என பெயர் சூட்டினார். ‘புண்டரீகன்’ என்றால் ‘தாமரை போன்ற முகம் கொண்டவன்’ என பொருள். சிவனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் காசி, காஞ்சிபுரம், கும்பகோணம் சிவன் கோயில்களை தரிசித்தார். இருப்பினும் திருப்தி ஏற்படவில்லை. கண்ணுவ முனிவரிடம் சென்று, “என்ன செய்தால் ஒரு திருப்தி ஏற்படும்?” எனக் கேட்டார். “சிவனை நேரில் தரிசித்தால் மட்டுமே திருப்தி ஏற்படும்’’ என்றார் கண்ணுவர். அதனால் நாகப்பட்டினத்தை அடைந்த கருத்தமர் வெட்ட வெளியில் தவமிருந்தார். மழை, வெயில் தாக்கியதால் அவரது உடல் புண்ணாகி கடும்வலி ஏற்பட்டது. இருப்பினும் பொருட்படுத்தாமல் தவமிருக்கவே, முனிவருக்கு காட்சி கொடுத்தார் சிவன். அவரைக் கட்டித் தழுவி காயங்களைப் போக்கி குணமாக்கினார். காயங்களை ஆற்றியதால் ‘காயாரோகணேஸ்வரர்’ என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. முனிவரின் வேண்டுதல்படி அத்தலத்திலேயே சிவலிங்கமாக எழுந்தருளினார். ‘காயம்+ஆரோகணம்’ என்று இதைப் பிரிப்பர். ‘காயம்’ என்றால் ‘உடல்’. ‘ஆரோகணம்’ என்றால் ‘தழுவுதல்’. அம்மன் பல தலங்களில் கன்னிப்பெண்ணாக அருள்புரிகிறாள். ஆனால் சிவத்தலமான இங்கு கன்னியாக இருப்பது சிறப்பு. கன்னியாக இருந்து சிவனை மணம்புரிய இன்றும் தவத்தில் இருக்கிறாள் அம்பிகை. நவராத்திரி சமயத்தில் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்னை விலகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவன் கோயிலாக இருந்தாலும் அம்மனுக்கே முக்கியத்துவம். அம்மன் சன்னதி முன்புள்ள நந்தி அம்மன், சிவனை ஒரே நேரத்தில் தரிசிப்பதாக ஐதீகம். எனவே இங்கு பிரதோஷ நேரத்தில் வழிபட்டால் சுவாமி, அம்மன் இருவரின் அருளையும் பெறலாம். காசியைப் போல இங்கும் முக்தி மண்டபம் உள்ளது. இதில் அமர்ந்து தியானித்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசை (மேற்கு) நோக்கி உள்ளது மற்றொரு தனி சிறப்பு. தசரதர் ஆட்சிக் காலத்தில் சனிதோஷத்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. சனீஸ்வரரை அடக்க எண்ணிய தசரதர் போரிட தேரில் புறப்பட்டார். மக்களின் நன்மைக்காக தன்னுடன் போர் புரிய வந்த தசரதரைக் கண்டு சனீஸ்வரர் மகிழ்ந்தார். விரும்பிய வரம் தருவதாக உறுதியளித்தார். சனி மீது ஸ்தோத்திரம் பாடிய தசரதர் பஞ்சம் நீங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சனீஸ்வரரும், தசரதரும் இங்கு ஒரே சன்னதியில் அருள்புரிகின்றனர். எப்படி செல்வது: நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ., நேரம்: காலை 6:00- 12:30 மணி, மாலை 5:00- 8:30 மணி விசேஷ நாட்கள்: ஆனியில் சாலிசுக மன்னனுக்கு சிவன் திருமணக்கோலம், ஆடி ரேவதி முதல் பத்து நாட்கள் அம்மன் தனி விழா, ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் அதிபத்தருக்கு காட்சி கொடுத்தல், நவராத்திரியில் ஒன்பது நாள் அலங்காரம், தொடர்புக்கு: 04365 242 844 அருகிலுள்ள தலம்: சவுந்தரராஜ பெருமாள் கோயில் 1 கி.மீ.,