அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருக்குறள் வரிக்கு சிறுவிளக்கம் கேளுங்கள். மதுரையில் இருந்து ஒரு பணக்காரர் சென்னை கிளம்பினார். செல்லும் வழியில் பசி...ஒரு ஸ்டேஷனில் ரயில் நிற்க சாப்பிட்டார். சட்டைப் பைக்குள் கையை விட்டார். பர்ஸைக் காணவில்லை. ஏடிஏம் கார்டு உட்பட ஏதும் இப்போது கையில் இல்லை. கடைக்காரனுக்கு இவர் பணக்காரரா ஏழையா என்பதெல்லாம் எப்படி தெரியும்? என்னய்யா சாப்பிட்டு விட்டு நடிக்கிறீரா? என்று கேவலமாக பேச ஆரம்பித்து விட்டான். ஆக, மதுரையிலுள்ள பணம் இப்போது இவருக்கு உதவவில்லை. இதுபோல் தான், பூலோகத்தில் அருள் என்னும் டெபாசிட்டை போட்டு வைத்தால் தான், அதற்குரிய வட்டி மேல் லோகத்தில் கிடைக்கும். அதற்கு நல்வார்த்தை பேசுதல், இயன்ற உதவி செய்தல் ஆகிய நற்செயல்களையெல்லாம் செய்திருக்க வேண்டும். கோயிலுக்கு வாரம் ஒருநாளாவது போய், சுவாமியை வணங்கியிருக்க வேண்டும். இறைநாமத்தை ஜெபித்திருக்க வேண்டும். இங்கே நன்மை செய்தால் அங்கே சொர்க்கம் கிடைக்கும்.