பதிவு செய்த நாள்
18
ஆக
2021
07:08
கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசுவோர், கடவுளை எப்படி வணங்க வேண்டும்; யார் பூஜை செய்ய வேண்டும்; எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பது ஏன், என, பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது:திருச்சி சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில், பல ஆண்டுகள் பணிபுரிந்த குருக்கள் பலரை நீக்கிவிட்டு, பிராமணர் அல்லாத பலரை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இந்த அத்துமீறலை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பாக, சுதந்திர தின நாளில், பிராமணர் அல்லாத, 24 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அர்ச்சகர்கள் பதவி ஏற்கும்போது, முன் பணி செய்த பல மூத்த அர்ச்சகர்களிடம் இருந்து, கோவில் சாவியை பிடுங்கி, அவர்களை அவமானப்படுத்தி, கோவில் நிர்வாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
கடந்த 10ம் தேதி சென்னை ஐகோர்ட் நீதிபதி அனிதா சுமந்த் தன் தீர்ப்பில்,ஆகம விதிகளை மீறாமல், மரபுகளை கடைப்பிடித்து, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என, தெரிவித்து உள்ளார்.புது அர்ச்சகர்கள் பலர், முறையாக ஆகம பள்ளியில் பயிலாவிட்டாலும், குரு- - சிஷ்யன் முறையில் தனிப்பட்ட முறையில் படித்தவர்கள்; அவர்களது குருவிடம் சான்றிதழ் பெற்றால் போதும் என்று, தமிழக அரசு கூறியிருப்பது, ஆகம விதிகளை மீறிய செயல்.
கடந்த, 2014ல் சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பில், அர்ச்சகர்களை அரசு நியமிக்கலாம்; ஆகம விதிகளை பின்பற்றியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந் நிலையில், கோவில் கர்ப்ப கிரகத்தில், சுவாமி சன்னிதியில் அனைத்து பிராமணர்களும் உள்ளே சென்று வழிபடலாம் என்றும், பரவலாக ஒரு விஷம பிரசாரம் செய்யப்படுகிறது.
முறைப்படி ஆகம சாஸ்திரம் படித்தாலும், அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று, மூலவருக்கு அபிஷேக அலங்காரம் செய்ய முடியும். மற்ற அனைவரும் கருவறைக்கு வெளியில் நின்றுதான் தரிசனம் செய்ய முடியும்.
கடவுளே இல்லை என்பவர்கள், நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள், கடவுளை எப்படி வணங்க வேண்டும்; யார் பூஜை செய்ய வேண்டும்; எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பது ஏன். இந்த நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
பிராமணர்கள் பூஜை செய்யக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்; இது பிராமண துவேஷத்தை தவிர வேறோன்றுமில்லை. ஹிந்து மதத்தின் அடித்தளம் பிராமணியம்.எனவே, இதுபோன்ற பிராமண விரோத போக்கால், ஹிந்து மதத்தை, கடவுள் நம்பிக்கையை தகர்த்து விடலாம் என, சிலர் தப்பு கணக்கு போடுவது, தமிழக பண்பாடு, கலாசாரத்திற்கு நல்லதல்ல.
அர்ச்சகர் நியமனத்தில் பிராமணர் சங்கம் சார்பில், நீதிமன்றம் சென்று, சட்டரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, ஹிந்து கலாசாரத்தை காப்பாற்றுவோம். தகுதியான சிவாச்சாரியார், குருக்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு நியாயம் வழங்கும் வரை போராட தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
சாவியை பிடுங்கி விட்டனர்
கடந்த, 33 ஆண்டுகளாக சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பணிபுரிகிறேன். கூடுதலாக, கீழநெட்டூர் பெருமாள் கோவிலிலும் பணி செய்து வந்தேன். இக்கோவிலுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் நேர்முகத்தேர்வு நடத்தினர். நான்கு பேர் விண்ணப்பித்தனர். ஒருவர் மட்டுமே தேர்வானார்.என்னிடம் இருந்த கோவில் சாவியை பிடுங்கி, புதிய அர்ச்சகரிடம் கொடுத்து விட்டனர். என்னை கோவிலுக்கு வர வேண்டாம் என, தெரிவித்து விட்டனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை.
சீனிவாச பட்டர்
சுந்தரராஜ பெருமாள் கோவில், சிவகங்கை.
வாழ்வாதாரம் போச்சு
நாங்கள் பல தலைமுறையாக அர்ச்சகர் பணி செய்து வருகிறோம். இப்போது இங்கு புதிய அர்ச்சகர் ஒருவரை நியமித்துள்ளனர். எங்களுக்கு சம்பளம் தரமாட்டோம் என்று கூறிவிட்டனர். புதிய அர்ச்சகருக்கு உதவியாக இருக்க சொல்கின்றனர். எங்களுக்கு இந்த கோவிலை விட்டால் வேறு எந்த வாழ்வாதாரமும் கிடையாது.
கிருஷ்ணன்,
பூமாயி அம்மன் கோவில் அர்ச்சகர், திருப்பத்துார்.
முடிவு தவறானது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் முடிவு தவறானது. தொன்று தொட்டு நாயன்மார்கள் காலத்தில் இருந்து, ஆலய வழிபாடு ஆகம விதிகளின்படி, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் செய்து வந்துள்ளனர். இதை, திருமுருகாற்று படை இலக்கியத்தில் நக்கீரரே கூறியுள்ளார். இதுபோன்ற நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது, மக்களிடையே ஜாதிய மோதலை ஏற்படுத்துவதாக உள்ளது.
நாகராஜ் குருக்கள், கடலுார்.
ஜாதி பாகுபாடு ஏற்படும்
சுவாமிக்கு தினசரி பூஜை செய்வதை பணி என்று பாராமல் சேவையாக செய்கிறோம். கொரோனா ஊரடங்கில் கோவில் மூடப்பட்டிருந்தும், வழக்கமான பூஜைகளை செய்தோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டம், மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது; சிவாச்சாரியார்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில், மக்களிடம் ஜாதி பாகுபாட்டை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
ஆனந்த் குருக்கள், கடலுார்.
வழக்கு தொடர்வோம்
அரசு உத்தரவு சிவாச்சாரியார்களை மனவேதனைக்கு உட்படுத்தியுள்ளது. தமிழுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கினாலும், நாங்களும் தமிழில் தான் வேதமந்திரங்களை ஓதுகிறோம். அரசின் இந்த அறிவிப்பு, சிறுபான்மை சிவாச்சாரியார்களை நசுக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக, நாங்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
சுரேஷ், அர்ச்சகர், 55;
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், விழுப்புரம்.
இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள்
தமிழகத்தில் குல தெய்வ கோவில்களில், அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தான், இன்றளவும் பூஜை செய்கின்றனர். அவர்களை யாரும் தொந்தரவு செய்ததில்லை. ஏனென்றால், அது அவர்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் பாரம்பரிய நடைமுறை. அது போலத்தான், ஆகம விதிப்படி, வேதத்தின் அடிப்படையில் செயல்படும் கோவில்களில், பிராமணர்கள், வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்களை கற்று, ஆச்சார்ய அனுஷ்டானங்களை பின்பற்றி, சுவாமிக்கு அர்ச்சனை மற்றும் பூஜைகளை செய்து வருகிறோம்.
கொங்கிலாச்சான் அப்பன்னாசாரி சுவாமி, பெரியகடை வீதி, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், கோவை.
உடனடி நியமனம் கூடாது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது, ஏற்கனவே இருக்கக்கூடிய சட்டம் தான்; தி.மு.க., கொண்டு வந்த புதிய சட்டம் அல்ல. சிவன், பெருமாள் கோவில்களை தவிர, பிற குலதெய்வக் கோவில்களில், அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களே, அர்ச்சகர்களாக உள்ளனர். யாரையும், எந்த கோவிலின் அர்ச்சகராகவும், உடனடியாக நியமனம் செய்யக் கூடாது. குறிப்பிட்ட கோவில் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, அவர் நடந்து கொள்கிறாரா என்பதை, ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி அளித்து, பயிற்சியின்போது, கட்டுப்பாட்டுடன் உள்ளாரா என்பதை அறிந்த பின்னரே, அவரை நியமனம் செய்தல் வேண்டும்.
மாதவ பட்டர்,
நாயக்கனுார், பெரியநாயக்கன் பாளையம், கோவை.
பின்னுக்கு தள்ளுவதா?
தமிழகத்தில், ஏற்கனவே சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், அந்த சமூகத்தினரும், வேளாளர் சமூக கோவில்களில், அதே சமூகத்தினரும் அர்ச்சகராக உள்ளனர். தற்போது சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்களை மட்டும் இலக்கு வைத்து செயல்படுகின்றனர். பிற சமூகத்தினரை பணியில் சேர்ப்பதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.இதற்காக பல ஆண்டுகள் படித்து, பரம்பரையாக இந்தப் பணியை செய்து வருகிறோம். குறைந்த சம்பளம் என்றாலும், இறைவன் பணி என்பதால் செய்து வருகிறோம். அரசு வேலை வாய்ப்பிலும் நாங்கள் பின்தள்ளப்படுகிறோம்.
பாலாஜி குருக்கள்,
மாரியம்மன் திருக்கோவில், அன்னுார், கோவை.
கண்ணீர் பொசுக்கி விடும்
புதிதாக பொறுபேற்ற அரசு, மரபையும், அறநிலையத் துறை சட்டங்களையும் மீறுகிறது; நீதிமன்ற தடையை பற்றியும் கவலைப்படாமல், அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த நிகழ்வு தொடரக்கூடாது. இதனால், தமிழகத்திற்கு பெரிய அளவு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்பு இனி வராது. ஏனென்றால், யாரோ சிலரின் வழிகாட்டுதலால் அவமானத்திற்கு உள்ளான மனிதர்கள் கண்ணீர் விட்டால், அந்தக் கண்ணீர் இவர்களை பொசுக்கிவிடும். இந்த விஷயத்தில், தீர்க்கமாக விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று, அரசு எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
வெங்கடேச தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோவில்