பதிவு செய்த நாள்
01
டிச
2021
05:12
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், மலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ சமயங்களில் முடி காணிக்கை செலுத்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்போது, பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படும். இதனையடுத்து, மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான, 93 சென்ட் இடத்தில், முடிக்காணிக்கை மண்டபம் கட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, தற்போது முடிக்காணிக்கை மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்,"மருதமலை அடிவாரத்தில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் மற்றும் 10 குளியலறை, கழிப்பறை கட்ட, 72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தபின், டெண்டர் விடப்படும்,"என்றார்.