பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
05:07
சென்னை: ராமஜென்ம பூமியான, உ.பி., மாநிலம் அயோத்தியில், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் புதிய கிளை அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில், சிருங்கேரி என்ற இடத்தில், ஸ்ரீ சாரதா பீடம் அமைந்துள்ளது.
இது, ஆதிசங்கரரால் தோற்றிவிக்கப்பட்டது. ரிஷ்ய சிருங்கர் எனும் மகரிஷி தவம் செய்த இடம் தான் சிருங்கேரி.உ.பி., மாநிலம், அயோத்தியில் ராம பரிவார் மற்றும் ராதாகிருஷ்ணர் கோவில்களை புதுப்பித்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீ சாரதா பீடம் ஏற்றுள்ளது. இந்த வளாகத்தில் ஸ்ரீ சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் புதிய கோவில்களும் அமைய உள்ளன. அயோத்தியில் அமையவிருக்கும் சிருங்கேரி மடத்தின் புதிய கிளையில், பக்தர்கள் தங்க, அனைத்து வசதிகளுடன் தர்ம சாலா அமைய உள்ளது.அரங்கம் மற்றும் ஹோமம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடமும் கட்டப்பட உள்ளன. காசி, ராமேஸ்வரம், பிராயக், மதுரா, நாசிக், ஸ்ரீசைலம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள சிருங்கேரி மடங்களிலும், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, அம்மடத்தின் முதன்மை செயல் அதிகாரி கவுரி சங்கர் அறிவித்துள்ளார். ஸ்ரீ சாரதா பீடத்தின் தற்போதைய ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், தன் 48வது சாதுர்மாச விரதத்தை, தன் சிஷ்யரான விதுசேகர பாரதீ சுவாமிகளுடன், சிருங்கேரியில் மேற்கொண்ட குரு பூர்ணிமா நாளில், இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.