மானாமதுரை: மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம் சமுதாய மக்கள் உள்பட 7கிராம மக்கள் கலந்து கொண்ட புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வேண்டி,திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் கருவிலுடைய அய்யனார் கோயிலுக்கு ராஜகம்பீரம், கொம்புக்காரநேந்தல், மேட்டுமடை, தீத்தான்பேட்டை, பெரும்பச்சேரி பாப்பாமடை ஆகிய 7 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம்.இதில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாய மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதும் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கொம்புக்காரநேந்தல், மேட்டுமடை, தீத்தான்பேட்டை, உள்ளிட்ட 7 கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் கிராமத்திலிருந்து ஊர்வலமாக ராஜகம்பீரம் அழகுநாச்சி அம்மன் கோவிலுக்கு வந்து அங்கு தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்ட பின்பு புரவிகளை ஊர்வலமாக கருவிலுடைய அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று வைத்த பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் உள்பட முஸ்லிம் சமுதாய மக்கள் பலர் பங்கேற்றனர்.