பதிவு செய்த நாள்
09
ஆக
2022
08:08
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை சிறப்பு நிலை செயல் அலுவலரில் இருந்து உதவி கமிஷனர் தரத்திற்கு உயர்த்த, ஹிந்து அறநிலையத் துறைக்கு விருப்பமில்லையா என கேள்வி எழுப்பு வகையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தரம் உயர்த்துவதற்கான கோப்புகள் 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் கோவில்களில் பக்தர்கள் வருகை, வருமானம் ஈட்டும் திறன் ஆகியவற்றில் முதன்மையாக இருப்பது, திருப்போரூர் கந்தசுவாமி கோவில்.சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். குறிப்பாக கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், செவ்வாய்கிழமை தோறும் பக்தர்களின் வருகை அதிகரிக்கிறது.
வருமானம் அதிகரிப்பு: இக்கோவிலுக்கு சொந்தமாக சென்னை, மதுரை, புதுச்சேரி, திருப்போரூர், கருநிலம், பொன்மார், ஆலத்துார், மறைமலை நகர் உட்பட பல்வேறு இடங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கடைகள் உள்ளன.பக்தர்களின் வருகை அதிகரிப்பு, பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து அதிகரிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இவற்றுடன் உண்டியல் வருமானம், வாகன நுழைவு கட்டணம், பிரசாத கடை ஆண்டு ஏலம், காணிக்கை முடி ஏலம் ஆகியவற்றால், வருமானம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, 50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவில் இருந்த இந்த கோவில், தற்போது 6 கோடி ரூபாய் வருவாய் கோவிலாக மாறியுள்ளது.மேலும், தகவல் தொழில்நுட்ப சாலை, ஆறுவழி சாலையாக மாறுவதால், கோவில் நிலங்கள் சாலைக்கு பயன்படுத்துவதின் மூலம் குத்தகை தொகை, 20 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
2009ல் கோப்பு: இதற்கிடையே, பக்தர்கள் அதிகளவில் வரவழைப்பதற்காக 3 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்ட, கோவில் சார்ந்த திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வு கூடம் சமீபத்தில் திறக்கப்பட்டது.வருவாய் பெருகி வரும் இந்த கோவில், சிறப்பு நிலை செயல் அலுவலர் நிலையிலேயே இருக்கிறது. கடந்த 2009ல், கோவில் செயல் அலுவலராக இருந்த கோதண்டராமன், இக்கோவில் சிறப்பு நிலை செயல் அலுவலர் நிலையிலிருந்து, உதவி கமிஷனர் தரம் உயர்த்துவதற்கான ஆவணங்களை தயாரித்து, சென்னை கமிஷனர், வேலுார் இணை கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், கோவிலை உயர்த்துவதற்காக, துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்தபாடில்லை.
அதிருப்தி: இதே காலக்கட்டத்தில் தரம் உயர்த்த அனுப்பப்பட்ட திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், சிறப்பு நிலை செயல் அலுவலர் தர வரிசை கோவிலாக கடந்த ஏப்., மாதத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால், பக்தர்கள் வருகை அதிகரிப்பு, வருமானம் அதிகமுள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோவில், உதவி கமிஷனர் தரத்திற்கு உயர்த்தப்படாமல், 13 ஆண்டுகளாக கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், தரம் உயர்த்தப்படாமல் இருப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:கந்தசுவாமி கோவில், உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு மாறும் நிலையை எட்டியும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்தாமல் உள்ளனர். அதற்கான கோப்பு, துறை சார்ந்த அலுவலகத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு மாறினால், கோவில் பணியாளர்களின் ஊதியம் அதிகரிப்பதுடன், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், கோவில் வங்கி கணக்கில், நீண்டகால முதலீட்டில் பல கோடி ரூபாய் உள்ளதால், கோவில் சார்ந்த இடத்தில் மருத்துவ கல்லுாரி துவங்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெயர் குறிப்பிடாத அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருப்போரூர் கந்தசுவாமி கோவில், உதவி கமிஷனர் அந்தஸ்த் குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்யவேண்டும். தரம் உயர்த்தப்பட்டாலோ அல்லது அதற்கான உத்தரவு பிறப்பித்தாலோ, கோவில் சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வி.வி.ஐ.பி., தரிசனம்: தேர்தலில் போட்டியிடுவோர், இக்கோவிலில் மூலவரை வேண்டினால், வெற்றி கிட்டுவதாக, அரசியல் கட்சியினர் கருதுகின்றனர். அதன்படியே கும்மிடிபூண்டி, காஞ்சிபுரம் சட்டசபை இடைத்தேர்தல் 2006ல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மணி நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இக்கோவிலில் வழிபாடு செய்தார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் 2015ம் ஆண்டு மூலவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். முன்னாள் முதல்வர்கள் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தரிசத்துள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் இக்கோவிலில் வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
என்னவெல்லாம் மாறும்?: கோவில் நிர்வாகம் தற்போது, சிறப்பு நிலை செயல் அலுவலர் அந்தஸ்தில் உள்ளது. மேலாளர், கணக்கர், தட்டச்சர், துப்புரவு பணியாளர்கள், ஓதுவார்கள், காவலர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்தும், குறைவான ஊதியமே பெறுகின்றனர். மேலும், நிர்வாக பணிகளை கவனிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் தரம் உயர்த்தப்படாததால், ஊழியர்களை நியமிக்க முடியவில்லை. கோவில் அந்தஸ்து உயர்த்தினால், பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம், கோவிலில் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். பக்தர்களுக்கான வசதிகள் மேம்படும். அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி கந்தசுவாமி கோவிலை, உதவி ஆணையர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.