அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆயத்தபணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2012 11:08
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது மற்றும் கோயிலை சீரமைப்பது தொடர்பான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற திருக்கூடவூர் அபிராமி அம்மன் கோயிலுக்கு இணையானது இத்திருக்கோயில். அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலும், அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரத்திலும் இக்கோயில் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.துர்நாற்றம்: தற்போது கவனிப்பாரற்று சிதிலமடைந்துள்ள இக்கோயிலில் கடந்த 1993ம் ஆண்டிற்கு பின் கும்பாபிஷேகம் நடத்தவில்லை. கோபுரங்களில் உடைப்புகள் ஏற்பட்டு அரசமர செடிகள் வளர்ந்து வருகின்றன. சிறிய அளவில் மழை பெய்தாலும் கோயில் பிரகாரத்தில் தண்ணீர் நிறைந்து சேறு படிந்து விடும். இந்த தண்ணீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் கோயில் முழுவதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.மழைநீர்: மின் இணைப்புகள் சரியில்லாததால் மழைகாலங்களில் மின் கசிவு ஏற்பட்டு எந்த இடத்திலும் கைவைக்க முடியாத அளவிற்கு ஷாக் அடித்துக்கொண்டிருக்கும். கோபுர இடைவெளி வழியாக மழை நீர் சன்னதிக்குள் இறங்கி அனைத்து பகுதிகளிலும் பாசம் படிந்துள்ளது. மனநிம்மதிக்காக வரும் பக்தர்கள் கோயிலின் அவல நிலையை கண்டு மனம் பதறும் நிலை தான் உள்ளது.நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில்,""அரசு ஆலோசனைபடி, கோயிலை முழுமையாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பணி குழு அமைக்கப்படும். ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களின் உதவியோடு கோயில் முழுமையாக மாற்றியமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக துப்புரவு பணி மற்றும் சகதிகளை வெளியேற்றுவது, சாக்கடை நீர் கோயிலில் தேங்காமல் பார்த்து கொள்ளும் பணியை நகராட்சி மேற்கொள்ளும், இவ்வாறு நகராட்சி தலைவர் கூறினார்.