பதிவு செய்த நாள்
23
ஏப்
2024
03:04
போடி; போடியில் சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் தங்கபட்டு உடுத்தி கோவிந்தா... கோபாலா என கோஷம் முழங்க கள்ளழகர் வேடத்தில் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார்.
இந்த ஆண்டு சித்திரை மாதத்தை பொறுத்தவரை சூரியன் ஆதிக்கத்தில் பிறந்துள்ளது. சூரியன் ஆதிக்கம் தங்கப்பட்டு உகந்ததாகும். அனைவருக்கும் சுபிட்சம், அமைதி, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று போடி சீனிவாசப் பெருமாள் 5 அடி உயரத்தில் புதிதாக செய்யப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் தங்கப்பட்டு உடுத்தி அரோகரா, கோவிந்தா, கோபாலா என கோஷம் முழங்க கொட்டகுடி ஆற்றில் காலை 6 மணி அளவில் இறங்கினார். அதன்பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் புரிந்தார். விழா நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்க கவுரவ தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, பொருளாளர்கள் கணேசன், மதன் மற்றும் நாயுடு நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா .. கோவிந்தா என்ற கோஷத்துடன் கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாசப் பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.
* உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள், உப்பார்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் முல்லை ஆற்றில் பக்தர்கள் கரவோசத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினர். உப்பார்ப்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரபுத்திரனாரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.