பச்சை பட்டுடுத்தி சாத்துார் வைப்பாற்றில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 03:04
சாத்துார்; சாத்துாரில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கினார். பெரிய கொல்லப்பட்டியில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து கள்ளழகராக பெருமாள் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கி பெரிய கொல்ல ப்பட்டியை அடைவார். அங்கு இரவு முக்கிய வீதிகள் வலம் வரும் சுவாமி பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஏற்று பின்னர் இரவு வைப்பாற்றில் நடைபெறும் வானவேடிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சித்ரா பெளர்ணமி முன்னிட்டு இன்று அதிகாலையில் சுவாமி சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. பின்னர் குதிரை வாகனத்தில் வீற்றிருந்த சுவாமியை பெரிய கொல்லப்பட்டி பொது மக்கள் நான்கு ரத வீதி வழியாக வலம் வரச் செய்தனர். அப்போது பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வத்தல்,வெங்காயம், பருத்தி, உள்ளிட்ட தானியங்களை வீசி வழிப்பட்டனர். பலர் கற்கண்டு சாதம் தானம் வழங்கினர். பின்னர் மதியம் 11:35 மணிக்கு சுவாமி வைப்பாற்றில் எழுந்தருளினார். அங்கு மருத்துவ குல சங்கம் சார்பில் அமைத்திருந்த திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர் செலுத்திய முடி காணிக்கை,தூப தீபத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் 1:00 மணிக்கு சுவாமி பெரிய கொல்லப்பட்டி கோயிலை சென்றடைந்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பலர் அன்னதானம், மோர், ரஸ்னா, பானக் கரம் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர். டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.