விழுப்புரம்; விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில் உள்ள கனகவல்லி நாயக சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமி முன்னிட்டு உறியடி உற்சவம் இன்று நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பிறகு, மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாளுக்கு, அபிஷேகம் செய்து, புஷ்பம், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் பெருமாளுக்கு கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உறியடி உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷங்களுடன், பக்தி பரவசத்துடன் உறியடித்து கொண்டாட்டத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.