ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு இலங்கைக்குப் போனான். அவள் கதறி அழுதாள். கோதாவரி நதியை பார்த்து, "அம்மா! கோதாவரி! நீயும் பெண். நானும் பெண். எனக்கு நேர்ந்த துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாயே! என்றாள். ராமன் சீதையைக் காணாமல் எங்கும் தேடி அலைந்தார். வழியில் இருந்த மரம், மட்டைகளைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அவற்றிடம் ""சீதையைக் கண்டீர்களா? என்று வழிநெடுக கேட்டார். ராவணன் மீது கொண்ட பயத்தால் கோதாவரி நதி உண்மையைச் சொல்லவில்லை. நமக்கு நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, அடுத்தவர்க்கு நன்மை பயக்கும் விஷயங்களில் அமைதி காப்பதும் குற்றமாகும். இதனால் ஏற்பட்ட பாவத்தை கலியுகத்தில் கோதாவரி போக்கிக் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பூமிதேவிக்கு பெரியாழ்வார், "கோதா என பெயரிட்டார். இதனால் எங்கேயோ ஓடும் கோதாவரி நதிக்கு பாவம் தீர்ந்தது.