இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்த கற்றுக்கொள்வோம்: மாதா அமிர்தானந்தமயி அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2025 12:02
கரூர்; ‘‘இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்த கற்றுக்கொள்வோம்,’’ என, மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்கினார். கரூர், செம்மடையில் உள்ள அம்ருதவித்யாலயம் பள்ளி வளாக மைதானத்தில், மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்கி பேசியதாவது: மனிதகுலம், பல தலைமுறைகளாக இயற்கை அன்னையை துன்புறுத்தி வருகிறது. இத்தனை காலமும், நம் தாயான இயற்கை அன்னை பொறுமையாக நம்மை மன்னித்து காத்து வருகிறார். அவர் தன் கருணை மற்றும் அன்பை நம் மீது இடையராது பொழிந்து வருகிறார். ஆனால் இது இனிமேல் தொடராது. இயற்கை அன்னையின் கருணை, பொறுமை மற்றும் பிற நற்பண்புகளை அவளுடைய பலவீனங்களாக நாம் பார்க்கத் தொடங்கியுள்ளோம். இயற்கை ஒரு சக்தி வாய்ந்த சக்தியாகும். அது காப்பதை போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்த கற்றுக்கொள்வோம். இவ்வாறு அருளாசி வழங்கினார். அவரது ஆசிகளை பெறவும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கானோர் வளாகத்திற்கு வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.