பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வழங்கிய ருத்ராட்ச லிங்கத்திற்கு, சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவிலில், திருவண்ணாமலை கிரிவலக்குழு சார்பில், இரவு 10:00 மணி முதல், அதிகாலை வரை, நான்கு கால சிவ பூஜையும், திருவாசகம் முற்றோதல் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், மாலை 4:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், தொடர்ந்து பிரதோஷ வழிபாடும் நடந்தது. காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவிலில், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரம்மராம்பிகை சத்யநாதசுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை, அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர், வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று மாலை 5:00 மணிக்கு மஹா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹாதீபாராதனை நடந்தது.
கோவை யோகா ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சிகள், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில், அகண்ட திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலை மதங்கீச பெருமான் கோவிலில், நேற்று மாலை 6:00 மணிக்கு சுபாஷினி வெங்கடேசனின் திருமுறை இன்னிசையும், இரவு 7:30 மணிக்கு காஞ்சி ஸ்ரீமகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் பரதநாட்டியமும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணி முதல், 1:30 மணி வரை, ஜோதி கோட்டீஸ்வரன், தயவுநிறை பழனி ஆகியோர் வள்ளலார் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினர். நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 47வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா அகண்ட பாராயணம் நடந்தது.