பதிவு செய்த நாள்
02
மே
2025
04:05
திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், அஹோபில மடத்தின் 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் முன்னிலை வகித்தார். முதல் நாளான இன்று காலை 6:30 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனத்தில் உலா நடக்கிறது. நாளை காலை 5:00 மணிக்கு ஹம்ச வாகனமும், இரவு சூரியை பிரபையும் நடைபெற உள்ளது. வரும் 4ம் தேதி கருட சேவை மற்றும் கோபுர தரிசனமும், வரும் 8ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை அஹோபில மடத்தின் வீரராகவர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்ம சுவாமியின் உத்சவரான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. பக்தோசித பெருமாள் கோவில் பிரம்மோத்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று உற்சவர் பக்தோசித பெருமாள், பெரிய மலைக்கு எழுந்தருளினார். இன்று காலை பெரிய மலையில் கொடியேற்றம் நடைபெற்றது. சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில், வரும் 15ம் தேதி வரை தினமும் பல்வேறு வாகனங்களில் உத்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார். பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை, வரும் 6ம் தேதி இரவு நடைபெறும். வரும் 8ம் தேதி தேர் திருவிழா நடைபெறும்.