பதிவு செய்த நாள்
02
மே
2025
04:05
சென்னை; திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், கருவறை வாசற்கால் நிறுவுதல், 17.47 கோடி ரூபாயில் மூன்று புதிய ராஜகோபுரங்கள், முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
பின், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், 70.27 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், கோவில் நிதி வாயிலாக, ஆறு கோடி ரூபாயில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம்; 4.80 கோடி ரூபாயில் அன்னதானக் கூடம் விரிவாக்கம்; 42 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உபயதாரர் நிதி, 12 கோடி ரூபாயில் உபசன்னிதிகள், கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், யாகசாலை மண்டபம் அமைத்தல்; 5.47 கோடி ரூபாயில், மேற்கில் ஐந்து நிலை ராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கில் மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலில், 19 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்தும் வகையிலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.