பதிவு செய்த நாள்
31
மே
2025
04:05
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேத்தாம்பட்டி கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில் 560 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்தும் வழிபட்டனர்.
சாணார்பட்டி அருகே வி.டி.பட்டி ஊராட்சி தேத்தாம்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது.இங்கு ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது.பழங்காலத்தில் இருந்தே ஆண்கள் மட்டும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டு வருகின்றனர்.பெண்கள் அப்போது அப்பகுதிக்கு வரக்கூடாது. திருவிழா நடக்கும் நாள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததால்,அதிலிருந்து திருவிழா நடக்கும் பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை.இந்த திருவிழா இன்று மதியம் முதல் நடந்தது. பின்னர் கைக்குத்தல் பச்சரிசி சாதம்,560 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, அதன் தலைகளை கோட்டை கருப்பண்ணசாமி கோவில் முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர். அதனைதொடர்ந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவுகள் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இந்த விழாவில் வி.எஸ்.கோட்டை,கோவில்பட்டி,காமாட்சிபுரம்,வடக்காம்பட்டி,பாலகவுண்டன்பட்டி,கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த திருவிழா நடத்தப்படுகிறது.இதற்காக வயல்களில் விளைந்த நெல்மணிகளை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேர்த்திக்கடனாக பெறப்படும். ஆடுகளை பலியிட்டு சமைத்து கோட்டை கருப்பண்ண சாமிக்கு படையலிட்டு அதை ஆண்களுக்கு மட்டுமே அன்னதானமாக வழங்கப்படும் என்றார்.