கற்பூர சுவாமிக்கு அசைவ படையல் போட்டு சாமியாட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2025 03:06
மானாமதுரை; மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ விழாவில் கற்பூர சுவாமிக்கு அசைவ படையல் போட்டு சாமியாட்டம் நடைபெற்றது.
மானாமதுரை சங்கு விநாயகர் கோவிலில் வருடம் தோறும் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ பால்குட விழா தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து கோயில் குடிமக்கள் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து சுவாமி சன்னதி முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர்.முத்துராக்கு அம்மன், விநாயகர் மற்றும் சகல தேவதைகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் மாம்பழம் மற்றும் பல்வேறு வகையான பழ தட்டுகள், பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு படையலிட்டனர்.இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி பால் குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். இன்று கற்பூர சாமி சன்னதியில் சாதம் ஆடு,கோழி இறைச்சி,முட்டை படையலிட்டு களரி பூஜை மற்றும் சாமியாட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி ஆடு,கோழிகளை பலியிட்டு அன்னதானம் நடைபெற்றது.