சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச தேரோட்ட கொடியேற்றம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு பாலாபிஷேகமும், கணபதி வேள்வி, மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. 9:30 மணிக்கு ஓதிமலை திருமடம் சுந்தர சிவனேச அடிகளார் முன்னிலையில், கொடியேற்றமும், காப்பு கட்டுதலும், தீபாராதனையும் நடந்தது. 28ம் தேதி வேல் வழிபாடு மற்றும் நவகோள் வழிபாடு நடைபெற உள்ளது. 29ம் தேதி மாலை விநாயகர், 18 சித்தர்கள் மற்றும் காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடக்கிறது. 30ம் தேதி முருகப்பெருமான் ஊர்கள் தோறும் படி விளையாடுதல் வைபவம் நடைபெற உள்ளது. 31ம் தேதி அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடும், காவடி ஆட்டம் ஆகியவை நடைபெற உள்ளது. பிப். 1ம் தேதி காலை, 7 ஊர்களில் இருந்து, பக்தர்கள், பொது மக்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, 10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. மாலை, 5:30 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. 2ம் தேதி காவடி எடுத்து வருதலும், 3ம் தேதி பரிவேட்டையும், 4ம் தேதி பவானி ஆற்றில் தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவசங்கரி மற்றும் சிறுமுகை உட்பட ஏழு ஊர்களின் பக்தர்கள், விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.