அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2026 10:02
அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்ரமணியர் குட்டீஸ் தேரை,குழந்தைகள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் தேர் பவனி. அரோகரா கோஷத்துடன் குழந்தைகள் வடம் பிடித்து ரத வீதிகளில் திருவீதி உலா. அவிநாசியில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகமும், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குட்டீஸ் தேர் எனப்படும் திருத்தேரில் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் எழுந்தருளினார். மாலையில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் தேரை குழந்தைகள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வந்து சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச தேர் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சபரீஷ் குமார் மற்றும் பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.