பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கிழக்கு ரதவீத பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.26,ல் தைப்பூச விழாவில் கொடியேற்றம் நடந்தது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் ஜன.,31 இரவு நடந்து வெள்ளி தேரோட்டத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று (பிப்.,1 ல்) அதிகாலை 5:00 மணிக்கு, சண்முக நதியில் தோலுக்கினியானில் சுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. தைப்பூச தேர் மாலை 4:09 மணிக்கு வடம் பிடித்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" கோஷத்துடன் உடன் தேரோட்டம் ரதவீதியில் நடைபெற்றது. கோயில் யானை கஸ்தூரி தேரின் பின்னே சென்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் தந்த பல்லாக்கில் தேர் கால் பார்த்தல் நடந்தது. தேரோட்டத்தில் கோயில் எம்.எல்.ஏ, செந்தில்குமார், திண்டுக்கல் கலெக்டர் சரவணன்., கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழா நாட்களில் முறையே புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு வெள்ளி யானை வாகனங்களில் இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (பிப்.2.,) இரவு 8:00 மணிக்கு தங்க குதிரை வாகனம் பிப்.3., இரவு 9:00 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலா நடைபெறும். பிப்.,4 மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெற்று, அன்று இரவு கொடி இறுக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவு அடையும்.