செஞ்சி: குறிஞ்சிப்பை சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை சிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன., 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மாரியம்மன், அம்மச்சாரம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி செடல் சுற்றினர். சக்திவேல் அபிஷேகம், கடப்பாரை உருவுதல், மழுவேந்தல், வேல் குத்துதல் மற்றும் தீமிதி விழாவும், மதியம் தேர், ரோடு உருளை இழுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு வள்ளலார் ஜோதி தரிசன நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு வான வேடிக்கையுடன் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.