நாமக்கல்; நாமக்கல், கீரம்பூர் அருகே புலவர்பாளையத்தில், 300 ஆண்டு பழமையான சக்தி விநாயகர், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 13 ஆண்டுளுக்கு முன் நடந்தது. இந்தாண்டு சக்தி விநாயகர், பகவதியம்மனுக்கு தனித்தனியாக கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது. பின், புதிய விக்ரஹங்களுக்கு கண் திறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம் செய்யப்பட்டு தீபாராதனையும், சக்தி விநாயகர், பகவதியம்மன் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், சக்தி விநாயகர், பகவதியம்மனுக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. மாலையில், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், புலவர்பாளையம் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.