பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில், பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள் பாலிக்கிறார். இக்கோவில், 13ம் ஆண்டு விழா பிப்., 7 அன்று துவங்கியது. காலை, 8.00 மணி முதல் வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, நவகிரக ஹோமம், உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பிரத்தியங்கரா நவாவர்ண பூஜை, பரிவார தெய்வ ஹோமங்கள் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, 8.00 மணிக்கு, ஸ்ரீ சண்டிகா தேவி ஆபரண பூஜை, மங்கல மகா சண்டி ஹோமம் ஆகியவற்றைத் தொடர்ந்து, மாலை, 6.00 மணிக்கு, பிரத்தியங்கரா நவசகஸ்ர ஆவர்த்தி மூல மந்திர ஹோமம் மற்றும் நிகம்பல யாகம் ஆகியவை நடந்தன. வாத்தியங்கள் முழங்க பால்குடம் மற்றும் பூச்சட்டி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.