தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்பு 2025- 26ன் படி தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஹிந்து தம்பதியினரில் யாரேனும் ஒருவருக்கு 70 வயது பூர்த்தி அடைந்திருந்தால் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அந்த தம்பதிகளுக்கு 2500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விதம் வழங்கி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக அவிநாசியில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழு நியமன உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன் முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் தலைமையில்,முன்னாள் அறங்காவலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரவிக்கையுடன் கூடிய புடவை, 700 ரூபாய் மதிப்பில் வேட்டி சட்டை, 300 ரூபாய் மதிப்பில் இரண்டு மாலைகள், 10 ரூபாய் மதிப்பில் வெற்றிலை பாக்கு, 20 ரூபாய் மதிப்பில் பூ, 30 ரூபாய் மதிப்பில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, 50 ரூபாய் மதிப்பில் வாழைப்பழம், 200 ரூபாய் மதிப்பில் பழ வகைகள், 140 ரூபாய் மதிப்பில் எவர்சில்வர் தட்டு, 40 ரூபாய் மதிப்பில் கண்ணாடி வளையல்கள் மற்றும் பாக்கெட் சைஸ் சாமி படம் என மொத்தம் 2500 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தம்பதியர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக மூத்த தம்பதியர்களை வரிசையாக அமர வைத்து கோவில் சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரங்கள் ஓதி சாமி பிரசாதங்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் கோவில் செயல் அலுவலர், மாவட்ட அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்,சிவாச்சாரியார்கள் ஆகியோர் மூத்த தம்பதியர்களுக்கு பொருட்களை வழங்கி சிறப்பு செய்தனர். மூத்த தம்பதியர்களின் கால்களில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் உறவினர்கள் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்