பெரம்பூர் அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 01:02
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1999 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, பழமை மாறாமல் திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில்களின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கின. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவில்களை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனை அடுத்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.