குரும்பபட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 10:03
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செந்துறை குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா மார்ச்.15 தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் மஞ்சள் திருப்பாவாடை காணிக்கையாக செலுத்தபட்டது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகுவேல் குத்துதல், அக்னிசட்டி, முளைப்பாரி பால்குடம், மாவிளக்கு, பறவை காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை குரும்பபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.