திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட இக்கோவிலில், பங்குனி மாதம் தோறும், ராம நவமி உத்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, 19ல் ராம நவமி உத்சவம் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சீதாதேவி – லட்சுமணனுடன், ராம பிரான் எழுந்தருளினார். பின், நையாண்டி மேளம், பேண்ட் வாத்தியங்கள் இசையில், ஒய்யாலி நடனமாடி, சுவாமி தேரில் எழுந்தருளினார். மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் துவங்கியது. கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘கோவிந்தா – கோபால ராமா’ என விண்ணதிர முழங்கியபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர். சன்னிதி தெரு, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகளை சுற்றி, நிலையை அடைந்தது. தேரில் எழுந்தருளிய ராமபிரானை வரவேற்கும்விதமாக, சிறுவர் – சிறுமியர் சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தினர். ராம நவமி திருக்கல்யாண வைபவம், ராமர் பட்டாபிஷேகம், இன்று நடக்கிறது.