காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், ஆறாவது நாள் உத்சவமான நாளை, 75வது ஆண்டு வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடக்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவின் ஆறாம் நாள், 3 2 அடி உயரம் கொண்ட வெள்ளி தேர் உத்சவம், 1950வது ஆண்டு முதல், தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நடக்கும் வெள்ளி தேர் உத்சவம், 75வது ஆண்டு, பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. உத்சவத்தையொட்டி, நாளை காலை சங்க சமுதாய கூடத்திலிருந்து, அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஏகாம்பரநாதருக்கு அபிஷேக வைபவம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் நான்கு ராஜ வீதிகளில், இரவில் வெள்ளி தேர் பவனி வந்து, கச்சபேஸ்வரர் கோவில் முன், வாண வேடிக்கை மிக விமரிசை யாக நடைபெற உள்ளது. பவள விழா வெள்ளி தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை, சங்க தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.