திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். நேற்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், ஆவுடை நாயகி, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவரால் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டது. தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.
தேரோட்டத்திற்குஅழைப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஏப்.,5ல் நடக்கிறது. இதில் வடம் பிடித்து தேர் இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் ஏப். 4ல் நடக்கிறது. மறுநாள் கோயில் முன்பு நிலை நிறுத்தியுள்ள பெரிய வைரத் தேரில் சுப்பிர மணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். திருப்பரங்குன்றம் பகுதியின் 43 கிராமத்தினர், பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க மலையைச் சுற்றி தேர் வலம் வரும். பாரம்பரிய அழைப்பு தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது. வசந்த் ஸ்தானிகர், கிராம நாட்டாமை சுகி, கர்ணம் வீரபத்திரன், வைராவி செல்வக்குமார், நாட்டாமைகள் ரத்தினம், முத்துக்குமார், காவல் தலையாரி மகாராஜன், மிராசு காவல்காரர்கள் வெற்றி வேல்முருகன், கண்ணன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிகை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைத்தனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது.