பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் லோகாம்பிகாதேவி சமேத பாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, கடந்த 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று தேர் திருவிழாவிற்கான தயாரிப்புகள் நடந்தன. 30 அடி உயர தேரில், உற்சவ பெருமான் வீற்றிருந்தார். காலை 9:30 மணிக்கு பக்தர்கள் உற்சாகமாக வடம்பிடிக்க, மாடவீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. பகல் 12:00 மணிக்கு கோவில் அருகே நிறுத்தப்பட்டது. மீண்டும், 3:00 மணிக்கு தேர் புறப்பட்டு, பொன்னேரி – பழவேற்காடு மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் செல்லும்போது, அங்கிருந்த பள்ளத்தில் தேரின் முன் சக்கரங்கள் சிக்கின. அந்நேரம், பின்பக்க சக்கரங்களின் அச்சுமுறிந்து இரண்டும் தனியாக கழன்று ஓடின. இதனால், தேர் ஒருபக்கமாக சாய்ந்து, பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. பக்தர்கள் மற்றும் தேரோட்டிகள், சுதாரித்து நகர்ந்ததால் அசம்பாவிதங்களில் இருந்து தப்பினர். அதேவேளையில், தேரின் மேல்பகுதியில் இருந்த அர்ச்சகர் அரவிந்தன், 40, இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால், பொன்னேரி – பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.